`சூர்யவன்ஷி’ படத்தின் படப்பிடிப்பு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் இருந்த பிழை ஒன்றைச் சுட்டிக்காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரிக்குத் தனது விளக்கங்களைத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். `சூர்யவன்ஷி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அக்‌ஷய் குமார் கடந்த செப்டம்பர் 25 அன்று, இந்தப் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்படும் என அறிவித்தார். இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். போலிஸ் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ரன்வீர் சிங் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோர் நின்றுகொண்டிருப்பது போல ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மூவரும் காக்கி உடை அணிந்திருந்தனர்.


இதனை ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.விஜ் விமர்சித்து பகிர்ந்திருந்தார். `இன்ஸ்பெக்டர் அமர்ந்திருக்க, எஸ்.பி நின்றுகொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இப்படி நடைபெறாது நண்பர்களே’ என்று இந்தி மொழியில் அவர் பதிவிட்டிருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள போலிஸ் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே கதைக்களம் என்பதால் அதில் ரன்வீர் சிங் நடிக்கும் `சிம்பா’ கதாபாத்திரம், அஜய் தேவ்கனின் `சிங்கம்’, அக்‌ஷய் குமாரின் `சூர்யவன்ஷி’ ஆகியவற்றைவிட படிநிலையில் கீழான இடத்தில் இருக்கிறது. 



ஐபிஎஸ் அதிகாரியின் ட்வீட்டிற்குப் பதில் தெரிவித்திருந்த அக்‌ஷய் குமார், காவல்துறையினரின் நடைமுறைகளை, கேமரா ஆன் செய்யப்பட்டவுடன் பின்பற்றுவதாகக் கூறியிருந்தார். `சார், இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம். எங்களைப் போன்ற நடிகர்களுக்குக் கேமரா ஆன் செய்யப்பட்டவுடன், காவல்துறையின் நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். நமது சிறந்த காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள். படம் வெளியான பிறகு, அதனைக் கண்டு மகிழ்வீர்கள் என நம்புகிறேன்’ என அக்‌ஷய் குமார் தனது பதிலைப் பதிவிட்டுள்ளார். 






ரியல் போலிஸ் அதிகாரிக்கும், ரீல் போலிஸ் அதிகாரிக்கும் இடையிலான இந்த உரையாடல் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஆர்.ஏ.விஜ் பதிவிட்ட ட்வீட்டிற்கு இதுவரை 24 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருப்பதோடு, பலரால் பகிரப்பட்டும் வருகிறது. அவரது பகிர்வை நடிகர் அக்‌ஷய் குமாரின் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். 



கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட `சூர்யவன்ஷி’ திரைப்படம் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. ஓடிடி தளங்களில் வெளியிடாமல், திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக இரண்டு முறை இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாவதாக அறிவிக்கப்பட்ட `சூர்யவன்ஷி’ இந்த ஆண்டின் ஏப்ரல் 30 அன்று வெளியாகும் எனத் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வரும் தீபாவளிப் பண்டிகையின் போது இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.