நடிகர் சஷிகுமார் தொலைக்காட்சி சீரியல்களில் தென்பட்ட பரிச்சயமான முகம், தனித்துவமான நடிப்பு காரணமாக சினிமாவிலும் அவ்வப்போது தென்பட்டவர். நடிகர் விஜய் உடன் திருப்பாச்சி ஷாஜஹான் படம் தொடங்கி, தலைமுறைகள், ஜேஜே, நள தமயந்தி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில்..


“திருப்பாச்சி படத்தின் ஒரு ஷாட்டுக்காக திரிசூலம் ரயில்வே டிராக்கில் நான் ஓடவேண்டும். நான் நன்றாக ஓடுவேன். விஜய்யும் அதுபோல ஓடுவாரா எனத் தெரியாது.அதனால் வேகம் குறைத்து ஓடவா என டைரக்டரிடம் கேட்டேன்.அதைக்கேட்டுவிட்டு விஜய், நீங்க ஓடுவது போல ஓடுங்க..நான் பின்னாடி பிக்-அப் செய்துக்கறேன் என்றார்.அவர் எனக்குத் தெரிந்து இண்ட்ரோவர்ட். ஆனால் நன்றாகப் பழகிவிட்டால் பேசத் தொடங்கிவிடுவார் என்றார்கள்.இப்பவும் எங்காவது சூட்டிங் ஸ்பாட்டில் அல்லது வெளியில் எங்காவது பார்த்தால் ஒரு நிமிடம் நின்று ‘எப்படி இருக்கிங்க?’ எனக் கேட்டுவிட்டுதான் செல்வார்.” என்றவர் நடிகர் கிரிஷ் கர்னாட் உடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசினார்.






“ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதில் என்னுடன் கிரிஷ் கர்னாடும் நடித்தார். என் வீட்டில் எல்லோரும் அவருக்கு பெரிய ஃபேன். சென்னையில் வேலை பார்த்திருந்தாலும் ஏனோ அவர் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை.படத்தில் அவருக்கு வசன உச்சரிப்புக்கு ஒருவர் உதவி செய்துகொண்டிருந்தார். சில வார்த்தைகளுக்கு பொருள் என்ன என அவர் கேட்க அருகில் இருந்த நான் விளக்கம் சொன்னேன். உடனே என்னிடம் இந்த படம் முடியும் வரை நீங்கதான் எனக்கு வசனம் சொல்லித்தர வேண்டும்” என்றார் என அவருடன் பணியாற்றிய 10 நாட்கள் பற்றி மெல்ல அசைபோட்டார்.