பா.ஜ.க.-வில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு X தளத்தில் அறிவித்துள்ளார்.




பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, நில அபகரிப்பு வழக்கில் அவர் புகாரளித்துள்ள சி.அழகப்பன் என்பவருக்கு பா.ஜ.க. கட்சி ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மகள் மற்றும் தன்னுடைய எதிர்காலத்திற்காக சட்டரீதியிலாக தொடர்ந்து போராடிவரும் கெளதமிக்கு பா.ஜ.க. தரப்பில் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் ராஜினாமா கடிதத்தில்,” பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து விலகுகிறேன். மிகுந்த மன வேதனை, ஏமாற்றத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்.  நாட்டின் வளர்ச்சிகாக பணியாற்ற நினைத்து இந்தக் கட்சியில் இணைந்தேன்.  என் வாழ்வில் இக்கட்டான சூழல் ஏற்பட்டபோதும் கட்சி உறுப்பினராக என் கடமையை செய்திருக்கிறேன். கற்பனை செய்ய முடியாத அளவிற்கான இன்னலில்  இருக்கிறேன். இப்படியான நெருக்கடியான காலத்திலும் கூட  கட்சியிடமிருந்தோ, கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் / தலைவர்கள் யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மேலும், கட்சியில் உறுப்பினர்கள் சிலர் நிதி மோசடியில் ஈடுபட்ட, என்னை ஏமாற்றியவருக்கு தொடர்ந்து உதவி வருவதாக அறிந்தேன். 17 வயதிலிருந்தே வேலை செய்து வருகிறேன். சினிமா, தொலைக்காட்சி, ரேடியோ, டிஜிட்டல் ஊடகம் என 37 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனக்காகவும் என் மகளின் எதிர்காலத்திற்காகவும் கடினமாக உழைத்தால்தான் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பை பெற முடியும் என வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறேன். என் மகளும் நானும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு தயாராகி வந்த காலகட்டத்தில் சி.அன்பழகன் என்னுடைய பணம், நிலம், அதற்கான ஆவணங்களை அனைத்தையும் அபகரித்து மோசடி செய்திருக்கிறார்.


20 ஆண்டுகளுக்கு முன், என் பெற்றோரை இழந்து, சின்னஞ்சிறு என் மகளோடு,  நான் தனியாளாக இருந்தபோது அக்கறை காட்டும் பெரிய மனிதராக அழகப்பனும் அவரது குடும்பத்தினர் என் வாழ்வில் வந்தனர். அவர் மீதிருந்த நம்பிக்கையில் என்னுடைய நிலத்தை விற்று தருகிறேன் எனச் சொன்னவரிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் வழங்கினேன். ஆனால், இப்போதுதான் புரிகிறது அவர் மோசடி செய்திருப்பது. 



என் கடின உழைப்பினால் ஈட்டிய பணத்தை அவரிடமிருந்து ஆவணங்களை மீட்க சட்ட ரீதியில் ஒரு இந்திய குடிமகளாக அனைத்தையும் முயன்றேன். அழகப்பன் மீது புகார் அளித்துள்ளேன். வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், நீதி கிடைக்கும் பயணம் சொல்ல முடியாத அளவிற்கு நீண்டு கொண்டிருக்கிறது.  கடந்த 2021- ம் ஆண்டு தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் பா.ஜ.க. எனக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதாக தெரிவித்தது. நானும் அந்த தொகுதியில் கட்சியை வலுப்படுத்த அர்பணிப்புடன் பணியாற்றினேன். ஆனால், கடைசி நேரத்தில் தொகுதி வேட்பாளராக பட்டியலில் என் பெயர் இல்லை. கட்சி பொறுப்பில் இருந்தவரை என் கடமையை சரியாக செய்திருக்கிறேன். 25 ஆண்டுகளாக கட்சிக்கு அர்ப்பணிப்புடன் என் பங்களிப்பை அளித்திருக்கிறேன். ஆனால், கட்சியில் இருந்து எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். என்னுடைய நெருக்கடியான காலத்தில் உதவ முன்வரவில்லை என்றாலும் என்னை ஏமாற்றிய நபருக்கு கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை அறிந்தேன். மிகவும் வருத்தத்துடன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். தனி மனுசியாக, SINGLE PARENT -ஆக நீதிக்காக போராடி வருகிறேன்; என் முதலமைச்சர், காவல் துறை, சட்ட துறை எனக்கான நீதியை வழங்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என அதிருப்தியுடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



கடந்த ஒரு மாதம் முன்பு, சென்னை காவல் ஆணையரிடம் கெளதமி அழகப்பன் மீது புகார் அளித்திருந்தார். அதில், “ நான் 17 வயது முதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி. எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் தொடர்பு கொண்டு எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.


 நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதே வேளையில் எனது கையெழுத்தை மோசடியாகப் போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர்.” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். 


அழகப்பன் மீது கெளதமி புகார் அளித்தும் அந்த விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் ராஜ பாளையம் தொகுதியில் ப்ல்வேறு களப்பணியாற்றியும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டது, மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பது, கட்சியில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது ஆகியவற்றை குறிப்பிட்டு அதிருப்தியுடனும் மிகுந்த வேதனையுடனும் கட்சியில் இருந்து விலகுவதாக கெளதமி அறிவித்துள்ளார்.