இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சென்னை நேரு, உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் முதலாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.




சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த உள்பட பல்வேறு முன்னணி திரைப்பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் பங்கேற்றார். விழாவில் பேசிய ஷங்கர் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் பேசிய ஷங்கர், இந்தியன் 2 படத்தின் முதல் ஷெட்யூல்  முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் செப்டம்பர் 3வது வாரம் தொடங்கும். பொன்னியின் செல்வன் என்ற பெரிய படத்தை தயாரித்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு நன்றி.


மணிரத்னம்தான் முதல் பேன் இந்தியா இயக்குனர். தில்சே (உயிரே), பம்பாய் படங்களின் மூலம் அவர் பேன் இந்தியா இயக்குனராக மாறினார். அவர் காட்டிய வழியில்தான் பேன் இந்தியா படத்திற்கு நாங்கள் எளிதாக சென்று வருகிறோம் என்று பேசினார்.




பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து இந்தியன் என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை இயக்கியிருந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.