பாலிவுட் திரையுலகில் 2008ம் ஆண்டு வெளியான 'இல் ஜானே து... யா ஜானே நா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் இம்ரான் கான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்ற இப்படத்தில் இம்ரான் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. அதன் தொடர்ச்சியாக  ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்லி பெல்லி, மேரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான 'கட்டி பட்டி' படத்தில் நடித்திருந்தார். 



 


இம்ரான் கான் பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை பல மன அழுத்தங்களை சந்தித்துள்ளார். 2011ம் ஆண்டு இம்ரான் கான்  - அவந்திகா மாலிக் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 


இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு நடிகை லேகா வாஷிங்டன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருவரும் காதலித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்தனர். நடிகை லேகா வாஷிங்டன் கோலிவுட்டில் ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.


இம்ரான் கான் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு எதிர்கொண்ட மன வலிகளை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். அது தொடர்பாக அவர் பேசுகையில் "2019ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிறகு நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவை நான் எதிர்கொண்ட கொடுமையான காலங்கள். ஒரு வாரமாக நான் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்தையும்  பூட்டிக்கொண்டு படுக்கையறையிலேயே படுத்து இருந்தேன். அந்த இறுக்கமான சூழலில் இருந்து மெல்ல மெல்ல நான் மீண்டு வந்தேன்.   



அதற்கு பிறகு தான் நடிகை லேகா வாஷிங்டனை சந்தித்தேன். அவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய பிறகு தான் என் வாழ்க்கையில் மாற்றங்கள் வந்தன. புது அத்தியாயத்தை துவங்கியதுபோல இருந்தது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். லேகா வாஷிங்டன் உடன் நான் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் எனக்கும் அவந்திகா மாலிக்கும் பிறந்த பெண் குழந்தையை நாங்கள் இருவருமே பார்த்து கொள்கிறோம். ஒரு குழந்தையின் பெற்றோராக என்னென்ன கடமைகள் உள்ளதோ அவை அனைத்தையும் நாங்கள் இருவரும் செய்து வருகிறோம்" என தெரிவித்து இருந்தார் நடிகர் இம்ரான் கான்.