சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூரில் இசைஞானி இளையராஜா நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் வருகின்ற மே 1ம் தேதி இசைஞானி இளையராஜாவின் "ராஜாவின் இசை ராஜாங்கம்" என்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 35,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

 

இசைஞானி இளையராஜா சிம்பொனியை முடித்துவிட்டு முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் பங்கேற்கும் மிகப்பெரிய இன்னிசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர் மனோ, ஸ்வேதா மோகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்களும், 100 இன்னிசை குழுவினரும் கலந்து கொள்ள உள்ளனர்

 

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் ஆன்லைன் வழியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது தற்போது வரை 8000-க்கும் மேலான டிக்கெடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை பொதுமக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்க பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 250 ரூபாய் என்ற சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. மே 1ஆம் தேதி நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி மாலை 6:30 மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித் ராஜா தெரிவித்தார்.