சினிமாவுலகில் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் பட வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வகையில் தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் ஒரே நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி இருந்தாலும், ஒரு கட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக இப்பொழுது ஹீரோவுக்கு வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ஏழுமலை, பரசுராம், ஒற்றன், முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு இன்றும் விருந்துதான். தமிழ் சினிமா உலகில் “ஆக்சன் கிங்” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் . இவர் “சேவகன்” மற்றும் “ஜெய்ஹிந்த்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான “ஹீரோ”, “இரும்புத்திரை” முதலிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. 80களிலேயே பெரும் நிறுவனங்களின் திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் இடையில் சறுக்கியபோது, மீண்டும் எழுந்து வருவதற்கு ஆன கஷ்டங்களை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். 



அப்போது பேசிய அவர், "ஏவிஎம், சத்யா என்று தொடர்ந்து சில படங்கள் பெரிய நிறுவனங்களுக்கு பண்ணினேன். எல்லாம் பெரிய பட்ஜெட் படம், ஆனா எல்லாமே சரியா போகல. மார்க்கெட் இறங்கிடுச்சு. அடுத்து பட வாய்ப்பே சுத்தமா இல்ல. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல. அப்போதுதான் முடிவு பண்ணேன், நாமளே டைரக்ட் பண்ணலாம்ன்னு. அதுதான் சேவகன் திரைப்படம். அந்த படத்தை நானே ப்ரொட்யூஸ் பண்ணி, இயக்கி, கதை எழுதி, நடிச்சு, எல்லாம் பண்ணினேன். ஆனா கைல இருக்குற காச வச்சு எடுத்த படம் தான். ஒரே ஒரு பிராப்பர்டி இருந்துது, அதையும் வித்துட்டேன். எதுவுமே இல்ல, அடுத்து என்ன நடக்கும்ன்னு தெரியாது, உடம்புல சுத்தமா எனர்ஜி இல்ல. இந்த செட்லதான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு, ஃபைட் நானே கம்போஸ் பன்னேன். சுத்தமா தெம்பு இல்லாம ஒரு ஓரமா உக்காந்து கண்ணை மூடி யோசிக்கிறேன். என் கண்ணு முன்னாடி மான்டேஜ் மாதிரி சில விஷயங்கள் வந்து போகுது, என் மனைவி குழந்தையோட போயி அந்த இடத்த விக்குறது, எங்க அம்மா உனக்கு செய்யணும்னு தோணுச்சுன்னா செய் ன்னு சொல்லி அவங்களுக்கு இருந்த சின்ன பிராபார்டிய வித்ததுன்னு, எல்லாம் கண்ணு முன்னாடி படம் மாதிரி ஓடுது. அப்போ ஒரு எனர்ஜி வந்தது. "எட்ரா கேமராவ"ன்னு சொன்னேன். க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணோம், படம் முடிஞ்சுது, ரிலீஸ் ஆச்சு, நாலு அஞ்சு படத்துக்கு அப்புறம் ஒரு ஹிட். மறுபடியும் ப்ரொட்யூசர் எல்லாரும் என்கிட்ட வர்றாங்க. அப்போ முடிவு பண்ணேன் வெளில யாருக்கும் படம் பண்ண கூடாதுன்னு. 



அப்போ புரிஞ்சுது தெம்பு உடம்புல இல்ல, மனசுல இருக்குன்னு. அதை திடப்படுத்துங்க எல்லாம் செய்ய முடியும் எல்லோராலயும். அதுக்கு அப்புறம் ஷங்கர் சார் வந்து கதை சொல்றேன்னு சொன்னார். நான் வேண்டாம் பண்ற ஐடியா இல்லன்னு சொல்லிட்டேன். அப்போதான் கதை கேளுங்க புடிக்கலன்னா பண்ண வேண்டாம்ன்னு சொன்னாரு. ஒரு கலைஞன் இப்படி சொல்லும்போது அத மதிக்கணும்ன்னு கேட்டேன், புடிச்சுது பண்ணினோம். ஜென்டில்மேன் ஹிட் ஆச்சு, அதுக்கு அப்புறம் முதல்வன் கதை கேட்டுட்டு நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். ஒரு முதலமைச்சர்ன்னு சொல்லும்போதே அதுக்கு ஒரு இமேஜ் வேணும், எனக்கு செட் ஆகாதுன்னு சொன்னேன். ஆனா என்ன கண்வின்ஸ் பண்ணி நடிக்க வச்சார், ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி" என்று கூறி முடித்தார்.