"சைல்டு ஆர்டிஸ்ட்டாக தொடங்கிய என் திரையுலக பயணம், இப்போது மகிழ்ச்சியான சீரியல் ஆர்டிஸ்ட்; என் பையனோடு சேர்ந்து நானும் அப்பப்போ குழந்தையாகும் தருணங்கள், கொரோனா லாக்டவுடன்,  குடும்பப் பொறுப்பில் நிறைவு, பரபரப்பில்லாத நடிப்புனு வாழ்க்கை, உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி  புன்னகையுடன் பேசுகிறார் சுஜிதா. 


கொரோனா தொற்று காலம் பலருக்கும் இடர் மிகுந்ததாக இருந்தாலும், பெரும்பாலானோர்கள் ‘ச்ச்சே. சீரியல் பார்க்க முடியலேயே’ என்று சொல்லும் அளவிற்கானது. குறிப்பாக, விஜய் டி.வி-யில் ஒளிப்பரபாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியை எப்போது மீண்டும் பார்ப்போம் என்றாகிவிட்டனர் ரசிகர்கள். தனம் கதாப்பாத்திரத்தில் அவ்வளவு நேர்த்தியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளயடித்த நடிகை சுஜிதா 
1980, 90-களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே.



 



வெள்ளித்திரை நினைவுகள் பற்றி...




என்னோட அண்ணன், மாஸ்டர் சுரேஷ் சினிமாக்களில் நடித்து வந்தார்.  மெளன கீதம் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் சார் கூட நடிச்சிருக்காங்க. சின்ன வயது ரஜினியாகவும் நடித்திருக்கிறார்.  என் முதல் அடையாளம் அதுதான்! பிறந்த 40-ம் நாள்ல 'அப்பாஸ்'ங்கிற தமிழ்ப் படத்துல முதன்முதலா நடிச்சேன். எம்.ஜி.ஆர் தயாரிச்ச அந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. அடுத்து, அண்ணன் 'முந்தானை முடிச்சு'ல நடிச்சாங்க. அப்போ நானும் அம்மாவும் ஷூட்டிங் ஸ்பாட்க்கும் போவோம். அந்த சமயத்தில், பாக்கியராஜ் சார் என்னை போலவே ஒரு குழந்தை வேண்டுமென தேடிக்கொண்டிருந்தார்.


அப்பறம். என்னைப் பிடித்து போனது. அதனால், என் அண்ணணிடம் கேட்டு,  பாக்கியராஜ் சாரின் குழந்தையா  அந்த படத்தில் நடிச்சேன். படத்தின் நகர்வுக்கு முக்கியக் காரணமான அந்தக் குழந்தையை ரசிகர்கள் எளிதில் மறந்துட மாட்டாங்க. இப்படிப் பையனாவும் பொண்ணாவும் நூற்றுக்கணக்கான படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். ரஜினி சார், கமல் சார்னு அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் நடிச்சேன். ஆனா, எனக்கு அதெல்லாம் எதுவுமே அவ்வளவாக ஞாபகம் இல்லை. அந்தப் படங்களையெல்லாம் எங்கம்மாகூட சேர்ந்து இப்போ டி.வியில அடிக்கடிப் பார்ப்பேன். அப்போ, அந்தத் தருணங்கள்ல நான் செய்த குறும்புகள் மற்றும் சுவாரஸ்யங்களை அம்மா எங்கிட்டச் சொல்லுவாங்க. 10 வயசுக்குப் பிறகு நடிச்சதெல்லாம்தான் ஞாபகம் இருக்குது. இப்பவும் அதெயெல்லாம் நினைச்சு பார்த்தா மலரும் நினைவுகள்தான்.






வெள்ளித்திரை டூ சின்னத்திரை- காரணம் என்ன பற்றி...


எனக்கு அப்போ அவ்வளவாக பக்குவம் இல்லை. என் நடிப்பை பார்த்து வாய்ப்புகள் வந்தன. நான் சென்னையில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் எனக்கு மார்டன் உடைகள் அணிவது பிடித்ததில்லை. நான் ஸ்லீவ்-லெஸ் ஆடைகள் அணிய கூட யோசித்திருக்கிறேன். சினிமாவில் நல்லதாக, நமக்கு பிடித்த கதாப்பாத்திரம் அமையும் என்றெல்லாம் அப்போது அறிந்திருக்கவில்லை. என் விருப்பத்திற்கு மாறாக வீட்டிலும் ஏதும் சொல்லவில்லை. அதனால சின்னத்திரையில் எனக்குப் பிடித்ததுபோல தாவணி, புடவை அணிந்து நடிக்கலாம்னு சொன்னாங்க அதான். டக்குன்னு சீரியலில் நடிக்க சரி சொல்லிட்டேன். அப்பறம், தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு நாளைக்கு மூன்று சீரியல் ஷூட்டிங் இருப்பதுபோல நிறைய நடித்திருக்கிறேன். மன நிறைவாக இருக்கு. ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது பிடித்திருக்கிறது. 





கொரோனா காலம் பற்றி....


இது எல்லாருக்குமே ரொம்ப இக்கட்டான காலம்தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘தனம்’-எல்லாரும் தேடுறாங்க. எப்போ உங்கள ஸ்கிரீன்ல பார்ப்போம்னி இன்ஸ்டாகிராம்ல பலர் மெசேஜ் செய்வாங்க. இதெல்லாம் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். 


பாண்டியன் ஸ்டோர்ஸ் அனுபவம் பற்றி....


பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே பிடித்து போனது. தனம் கதாப்பாத்திரம் அவ்வளவு பிடித்துப் போனது.  கதையை கேட்டவுடன் நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். முதல்நாள் ஷூட்டிங் போனேன். யாரெல்லாம் இதில் நடிக்க போறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். சாந்தி வில்லியம்ஸ் ஆன்டிய எனக்கு ரொம்பவே நல்லா தெரியும். அவங்ககிட்ட சொன்னேன்.’ நிச்சயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பிடிக்கும்ன்னு’ சொன்னேன். அன்றிலிருந்து இன்றுவரை எல்லாரும் கொண்டாடும் சீரியல பாண்டியன் ஸ்டோர்ஸ் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


இளமை காலம் பற்றி ....


என்னுடய டீன் ஏஜ் முழுவதும் சீரியல் ஷூட்டிங்லேயே போயிடுச்சு. அதில் வருத்தம் ஏதும் இல்லை. ஒரு மொழியில் ஒன்றிற்கும் மேலான சீரியலில் நடிக்க கமிட்டாக மாட்டேன். வெவ்வேறு மொழிகளில் நடிப்பதில் தெளிவாக திட்டமிடுவேன். ஏன்னா, மக்களுக்கு என்னாடா எல்லா சீரியலிலும் வராங்களேன்னு தோணிடக் கூடாதுல்ல. அதில் நல்லதுதான் விளைந்திருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன்’’


இவ்வாறு அந்த பேட்டியில், சிரித்துக்கொண்டே விடைபெற்றார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘தனம்’- சுஜிதா