பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன் சார்பில் ஃபிராங்கிளின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரைட்டர். படத்தில் நாயகனாக சமுத்திக்ரகனி நடிக்க  முக்கியமான கதாபாத்திரத்தில் இனியா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.சமூக சிந்தனை கொண்ட படங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. என்னதான் இயக்குநராக இருந்தாலும் தற்போது கோலிவுட் , டோலிவுட் பக்கங்களில் சமுத்திரக்கனிக்கு மவுசு அதிகம் . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ரைட்டர் திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.






 


 


ரைட்டர் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. அப்போது பேசிய படத்தின் நாயகி இனியா, இயக்குநர் ஃபிராங்கிளின் என்னிடம் கதை கூறினார். அதன் பிறகு எனது ரோல் குறித்து கேட்டதற்கு சஸ்பென்ஸ் என கூறிவிட்டார்.  படத்தின் கதை முழுவதும் சொன்ன பிறகுதான் எனது ரோல் குறித்து விளக்கினார். படத்தின் முக்கியத்துவத்தை அறிந்துதான் நடித்துள்ளேன். பா.ரஞ்சித் சாருடன் முழு நீள படம் ஒன்றில் நடிக்க ஆசை. ஆனால் அவரது தயாரிப்பில் நடிக்க மிகுந்த மகிழ்சியாக இருக்கிறது. ஆரம்பத்தில் படத்தின் ஹீரோ சமுத்திரக்கனி என எனக்கு தெரியாது. அவர் ஏதோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் என நினைத்தேன்..படப்பிடிப்பு தளத்தில்தான் அவர்தான் படத்தின் ஹீரோ என எனக்கு தெரியவந்தது. அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் கொடுத்துவிட்டார் இயக்குநர்.படத்தில் நான் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். முன்னதாக துபாயில் குதிரை சவாரி கற்றுக்கொண்டேன். படத்தில் அப்படியான காட்சிக்காக இரண்டு நாள் இதற்காக மீண்டும் பயிற்சி எடுத்தேன் .” என கூறியுள்ளார்.நீலம் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கவுள்ள மூன்றாவது திரைப்படம் இதுவென்பது குறிப்படத்தக்கது.