பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோடு மௌவல் மௌவல்


இந்தப் பாடல் வரிகள் ஸ்ரேயாவுக்கு உண்மையிலேயே அத்தனை பொருத்தமானதுதான். கலா ரசிகர்களுக்கு அது தெரியும்.


ஸ்ரேயா தனது காதலருடன் இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பகிர்ந்து தள்ளுவார். திடீரென இஸ்டாவில் அவர் இன்டரஸ்ட் காட்டவில்லை. அதன் ரகசியம் இப்போது தான் வெளியாகியுள்ளது.குழந்தையை சுமந்திருந்த ஸ்ரேயா இப்போது குழந்தையுடன் இன்ஸ்டாவிலும் இன்டர்வியூக்களிலும் பிஸியாக இருக்கிறார்.


ராதா என்றால் மகிழ்ச்சி!


ஸ்ரேயா சரண் தனது காதலர் ஆண்ட்ரே கோஷ்சேவை கரம் பிடித்தார். அவருக்கு கடந்த ஜனவரியில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர் ராதா என்று பெயர் சூட்டியுள்ளார். ராதா என்றால் சமஸ்கிருதத்திலும் சரி ரஷ்ய மொழியிலும் சரி மகிழ்ச்சி என்றுதான் பொருளாம்.


லாக்டவுனில் தனது முதல் பிரசவத்தை சந்தித்த ஸ்ரேயா சரண் அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தனது கணவர், குழந்தையுடன் இருந்த ஸ்ரேயா இப்போது மும்பை திரும்பியுள்ளார். ஸ்ரேயா, ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், கமனம், மியூசிக் ஸ்கூல் ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இப்போது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர், அத்தனை பரபரப்புக்கும் இடையே தி இந்து ஆங்கில நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.




மகள் ராதாவுடன் ஸ்ரேயா


உலகமே கொரோனா தொற்றில் இருண்டிருந்த வேளையில் தான் இரண்டாவது அலையில் நான் எனது உயிர் நட்பை இழந்தேன். அப்போது தான் எனது கர்ப்பமும் உறுதியாகி இருந்தது. கொரோனாவில் கோரப்பிடியில் உலகம் இருந்ததால், என்னால் எனது மகிழ்ச்சியான தருணத்தை யாருடனும் பகிர முடியவில்லை. நானும் மனதளவில் தயாராக வேண்டும் என்று காத்திருந்தேன். இதோ இப்போது ராதாவும் மற்றவர்களுக்கு காட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள்.
தாய்மைப் பயணத்தை நான் அணுஅணுவாக ரசிக்க விரும்பினேன். அதனால் எனக்குப் பிடித்ததை செய்தேன். விரும்பிய நூல்களைப் படித்தேன். விருப்பமான உணவை சாப்பிட்டேன். பார்சிலோனா தெருக்களில் நடந்து திரிந்தேன். 
எனது உடல் எடை கூடியது. நான் சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்களை தவிர்த்தேன். சமூகத்தின் விமர்சனங்களுக்கு நான் அஞ்சியதே இல்லை. ஆனால், என்னிடம் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களும் வரக்கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்த்தேன்.


என்னுடன் சில நாட்கள் எனது அம்மா இருந்தார். அப்புறம் எனது மாமியாரும் வந்து சேர்ந்தார். லாக்டவுனில் நாங்கள் அனைவரும் சேர்ந்து காலத்தைக் கழித்தோம்.


நாங்கள் சில நாட்கள் ரஷ்யாவிலும், அப்புறம் பார்சிலோனாவிலும் இருந்தார். ராதா எங்களுடன் நிறையவே பயணப்பட்டுள்ளார். அவருக்குப் பயணம் பிடித்திருக்கிறது. எங்கள் வாழ்வில் எல்லாம் நேர்மறையாகவே இருக்கிறது. இப்போது மும்பையில் எனது குழந்தை ராதாவைப் பார்த்துக் கொள்ள நல்ல தாதி கிடைத்துள்ளார். எனது அம்மாவும் கூட இருக்கிறார். 


கொரோனா காலத்தில் நான் பேக்கிங்கும் சமையலும் கற்றுக் கொண்டேன். கொரோனா காலத்தில் கர்ப்பம் என்பது கொடுமையானது. ஆனால் என்னை ஆசுவாசப்படுத்த என் பெற்றோர் இருந்தனர். இருப்பினும் எனது உண்மையான ஆறுதல் எனது கணவர் தான். கூடவே என் மகளும். முன்பு உள்ளிருந்து பலமளித்தால் இப்போது என் கைகளில் இருந்து கொண்டு அளிக்கிறார் என்று ஸ்ரேயா நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.