இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் தான் அட்டக்கத்தி. இந்த படம் தமிழ் சினிமாவில் பேசாத வாழ்வை பேசியது. மேலும் புதிய கதை சொல்லல் முறைக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. இப்படத்தின் மூலம் பல கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தனர். அதில் முக்கியமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி என்கிற கானா பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி அதில் இடம்பெற்ற ஆசை ஓர் புல்வெளி பாடல் கல்லூரி இளைஞர்கள் காதலுக்கு அடையாளமாக மாறியது.


இதனால் பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றியது. குறிப்பாக பா.இரஞ்சித் இயக்கத்தில் இதுவரை வெளியான அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். தமிழ் திரையுலகில் சுமார் 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வந்த இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பா.இரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சந்தோஷ் நாராயணனுக்கு பதில் சுயாதீன இசைக் கலைஞர் தென்மாவை இசையமைக்க வைத்துள்ளார்.


இதேபோல் அவர் அடுத்ததாக இயக்க உள்ள சியான் விக்ரமின் படத்துக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. கமலுடன் ஆன திரைப்படத்திற்கு இளையராஜா இசையாக இருக்கலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. 



ச.நா - ரஞ்சித் கூட்டணி முறிவு


இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் சந்தோஷ் நாராயணனை பா.இரஞ்சித் புறக்கணிப்பதற்கு என்ஜாய் எஞ்சாமி பாடலின் போது சர்ச்சை தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. அப்பாடலில் பாடிய தெருக்குரல் அறிவை புறக்கணித்துவிட்டு தனது மகளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முன்னிலைப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தன. ரொலிங் ஸ்டோன் இதழில் அறிவு புகைப்படம் இல்லாமல் இருந்ததற்கு சந்தோஷ் நாராயணன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் பா.இரஞ்சித்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.


தொடர்புடைய செய்திகள்: கோடிகளுக்கு அதிபதியாக வலம் வரும் தெருநாய்கள்! ரூ.5 கோடிக்கு சொந்த நிலம்!


மவுனம் கலைத்த ரஞ்சித்


ரஞ்சித் அவர் தரும் நேர்காணல்களில் இந்த பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை. முதன்முறையாக அவர் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் பேசுகையில், "சந்தோஷ் நாராயணன் பாடல்களை நான் முதலில் கேட்கும்போது பெருசா ஈர்க்கவில்லை. முதலில் அவருடைய இசை வெஸ்டர்னா, ஃபோக்கா இருந்துது. ஆனா அவர் அதை கண்ட்ரோல் பண்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. அதனால அவரோட இணைஞ்சு வேலை செஞ்சோம். அப்புறம் நான் என்ன கேக்குறேன்னு அவர் தெளிவா புரிஞ்சுப்பார்", என்று கூறினார்.



அவர் பாட்டு எனக்கு பிடிக்கல


மேலும் அவர் குறித்து பேசிய அவர், "நான் எல்லோரையுமே அவங்களோட சவுண்ட வச்சுதான் மதிப்பிடுவேன். அவர் பயன்படுதுற சவுண்ட் நல்லாருக்கும். எனக்கு இதுக்கு மேல ஒரு லேயர் வேணும்னு கேட்டா அது என்னன்னு கரெக்ட்டா புரிஞ்சு செய்வார். எனக்காக முதல்ல அவர் பண்ண பாட்டு 'வா ரூட்டு தல'தான். எனக்கு அந்த பாட்டு அவ்வளவா பிடிக்கல. அதுக்கு அப்புறம் தான் நடுகடலுல, ஆடி போனா ஆவணி எலலாம் பண்ணோம். இப்போ தென்மாவை வேலை வாங்குறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. அவர் பெரிய கலைஞன். அவரை கூட்டிட்டு வந்து சினிமாவுக்காக இதெல்லாம் பண்ணனும்ன்னு சொல்லும்போது கஷ்டமாதான் இருக்கும். ஆரம்பத்துல அவர்கிட்ட நான் என்ன எதிர்பார்க்குறேன்னு சொல்றது கஷ்டமா இருந்துச்சி",என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.