இந்துத்துவம் குறித்து விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சாவின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உரிம அட்டை திரும்பப் பெறப்பட்டுள்ளது.


கன்னட நடிகர், சமூக செயற்பாட்டாளர், தலித் பழங்குடியின் ஆர்வலர் என வலம்  வந்த கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா "இந்துத்துவா பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று  கடந்த மாதம் ட்வீட் செய்திருந்தார்.


கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த காந்தாரா படத்தில் இடம்பெற்ற ‘பூத கோலா’  பண்பாடு, பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களின் பண்பாடு என்றும், இது இந்துக்களின் பண்பாடாக சித்திரிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி சேத்தன் விமர்சித்திருந்தார் .


மேலும் “இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பொய்களின்மேல் கட்டமைக்கபட்ட ஒரு மதம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து சேத்தன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் கர்நாடக காவல் துறையால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.


அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி இருந்தனர்.


இதேபோல் கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் பெங்களூருவில் ஹிஜாப் வழக்கை விசாரணை செய்த நீதிபதியை விமர்சித்து சேத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், நீதிபதிகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கூறி சேத்தன் அஹிம்சாவின் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உரிமம் (Overseas Citizen of India Card) திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்தவித தெளிவான விளக்கமும் சேத்தன் அஹிம்சாவிற்கு அளிக்கப்படவில்லை.


சேத்தன் சமீபத்தில் தான் சிறையிலிருந்து திரும்பிய நிலையில், சில நாட்களில் வெளி நாட்டில் வாழும் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் oci அட்டையை திரும்ப ஒப்படைக்குமாறு வெளி நாட்டினர் பதிவு அலுவலகத்திலிருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது.


இந்நிலையில், திரைத்துறையிலும் அரசியல் ரீதியாகவும் தற்சம்யம் தான் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளின் முழு தகவல்களையும் அவற்றுடன் 32 புகைப்படங்களுடனான ஆவணங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார். மேலும் தனக்கு இந்தியாவிற்குமான உறவு எவ்வளவு உணர்வுப்பூர்வமானது எனவும் விளக்கி தனது ஒசிஐ உரிமம் மறுக்கபட்டதற்கான காரணத்தை கேட்டுள்ளார். 


 ”இதுபோன்ற ஒரு செயல்பாடு என்னை போல் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க நினைக்கும் இளைஞர்களை பயமுறுத்துவதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றன.அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவம், சமூகநீதி போன்ற விஷயங்களூக்காக போராடும் எங்களை போன்றவர்கள் தேசவிரோதிகள் என அடையாள குத்தபடுகிறோம்.” என சேத்தன் இது குறித்துப் பேசியுள்ளார்.


யேல் பல்கலைக்கழகத்தில் தனது பட்டபடிப்பை முடித்த சேத்தன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியபின் நிரந்தரமாக இந்தியாவில் வசிக்கத் தொடங்கினார்.பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்றதுடன் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.


கல்வி  நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து போராட்டம் , விவசாயப் போராட்டம்,பழங்குடி மக்களுக்கான போராட்டம் என பல போராட்டங்களில் பங்குபெற்றுள்ள சேத்தன், எண்டோசுல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக போராடி அந்த மக்களுக்கு இழப்பீடாக 90 கோடி நிதியுதவி பெற்றுத் தந்ததில் இவரது பங்கு முக்கியமானது.