சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான ஆல் டைம் பேவரைட் சூப்பர் ஹிட் நகைச்சுவை படங்களில் ஒன்று 'வேலைக்காரன்'. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமலா, செந்தில், சரத்பாபு, பல்லவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


தமிழ் ரீமேக்:


அமிதாப் பச்சன், ஸ்மிதா பாட்டில், ஷஷி கபூர், பர்வீன் பாபி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நமக் ஹலால்' என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

 

 



இந்தி வெர்ஷன் திரைக்கதையை அப்படி தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமிதாப் பச்சனின் பிரபலமான வசனமான "I can talk English, I can walk english " என்ற வசனத்தை அப்படியே தமிழ் படத்திலும் வைத்து இருந்தனர். இந்தி வர்ஷன் போலவே தமிழ் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.  

இளையராஜாவின் இசை:


இசைஞானி இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற தோட்டத்துல பாத்தி கட்டி, வா வா வா கண்ணா வா, மாமனுக்கு மயிலாப்பூர், வேலை இல்லாதவன் என படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. இப்படத்தில் இடம்பெற்ற 'வா வா வா கண்ணா வா...' பாடலை பின்னணி பாடகர் மனோ பாடியிருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு மனோ பாடிய முதல் பாடல் இதுவாகும்.

இந்நிலையில், 'வேலைக்காரன்' படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் பிரபல திரைப்பட விநியோகஸ்தர்,  முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் முன்னதாக பகிர்ந்த சுவாரஸ்யத் தகவலைப் பார்க்கலாம்.


சம்பளம் வாங்காத ரஜினிகாந்த்: 


நடிகர் ரஜிகாந்த்துடன் நல்ல நட்பைக் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், தங்கள் நட்பு குறித்து பேசுகையில், “சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்த முதல் தமிழ் ஹீரோ ரஜினிகாந்த் தான்” எனத் தெரிவித்துள்ளார். கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஸ்ரீ ராகவேந்திரர்' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சம்பளம் இன்றி 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளார். 'ஸ்ரீ ராகவேந்திரர்' திரைப்படம் ரஜினிகாந்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 



ரஜினியின் நல்ல மனம் :


அதே போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அப்போது வெளிநாட்டுக்குச் சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் நஷ்டம் அடைந்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய அவர்களை நாடியுள்ளார். அத்தகைய நல்ல மனம் படைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். இப்படி ஒரு அக்கறை கொண்ட முதல் தமிழ் ஹீரோ என்றால் அது அவராக மட்டும் தான் இருக்க முடியும்.  


நடிகர்களின் சம்பள உயர்வு : 


இன்று இருக்கும் நடிகர்கள் அவர்கள் நடித்த ஒரு படம் வெற்றிபெற்றால் உடனடியாக அவர்களின் சம்பளத்தை உயர்த்தி கொள்கிறார்கள். ஒரு தொழில்துறைக்கு இது ஆரோக்கியமான போக்கு அல்ல. அவரவரின் தகுதிக்கேற்ற சம்பளம் கேட்பது தான் பெருந்தன்மையாக இருக்கும்" எனக் கூறியிருக்கிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.