பார்க்கிங்


ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது.


ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த  நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க வளையம் அணிவித்து அவரை கெளரவித்துள்ளார்.




ஹரிஷ் கல்யாணிடம் சொல்லும்ப்பொது பதட்டமா இருந்தது


இந்த நிகழ்வில் பேசிய பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.


ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்த சினிஸ் அண்ணனுக்கு நன்றி. லாக்டவுன் சமயத்தில் மூன்று கதைகள் சொன்ன போது, இது செய்யலாம் என அவர்தான் சொன்னார். என் மீதும் படம் மீதும் சுதன் சார் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.


இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து அவர் ஹேப்பி. ஹரிஷ் கல்யாண் அண்ணனிடம் கதை சொல்லும் போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்டரி ஆக்டர். படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே ரொம்ப கோபமாக இருந்தார்.


படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி” எனப் பேசினார்.


மழை வெள்ளத்தால் பாதிப்பு வருமோ என யோசித்தோம்


இணை தயாரிப்பாளர் சினிஸ் பேசியபோது “ஒவ்வொரு நாளும் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிப்பு வருமோ என யோசித்தோம். ஆனால், திரையரங்குகளில் இப்போது வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல கதை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், பிரார்த்தனா, ரமா என அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.


எம்.எஸ் பாஸ்கர்


நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும்.


படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”.


ரொம்ப கஷ்டப் பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்


நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியபோது “படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் எனப் பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம்.


இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலைபார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.