நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்த காரணத்தினால் திரையரங்கம் சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் திரையரங்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே திரையரங்க வெளியீட்டிற்காக காத்திருந்த படங்களை ஒடிடியில் வெளியிடுவது என  2டி எண்டர்டைன்மெண்ட் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  



அதன்படி  ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. மேலும் இந்த படங்கள் எந்த மாதங்களில் வெளியிடப்படும்  என்ற தேதியும் அதன் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒன்றான உடன் பிறப்பு படம் குறித்து இசையமைப்பாளர் இமான் பதிவிட்டுள்ளார்.உடன்பிறப்பு படத்திற்கு இசையமைக்கிறேன் என்பது மகிழ்ச்சி. அக்டோபர் மாதம் படம் வெளியீடு எனக் குறிப்பிட்டுள்ளார். இமானின் பதிவுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அழகான பாடல்களை கொடுக்க வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளனர்.




>> Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற




ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடிப்பில், இரா. சரவணன் இயக்கத்தில் தயாராகும் ‘உடன்பிறப்பு ‘ திரைப்படம் வருகிற அக்டோபர்  மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்  சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளனர் படக்குழு. படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இப்படம் குறித்து பதிவிட்ட நடிகர் சூர்யா, உடன்பிறப்பின் அன்பு, உணர்ச்சிகள் குறித்த மிக ஆழமான ஒரு திரைப்படம் என தெரிவித்திருந்தார். இப்படத்தின் போஸ்டரில் நடிகை ஜோதிகா கிராமத்து பெண்மணி வேடத்தில் சரியாக பொருந்தி இருந்தார். மறுபுறம் சசிகுமாரும் கிராமத்து கெட்டப்பில் இருந்தார்.