தமிழ் சினிமா போட்டிகள் நிறைந்த களமாக பார்க்கப்படுகிறது. அந்தந்த காலக்கட்டத்தில் நிழல் உலகில் மிகப்பெரிய போட்டி  நடிகர்களாக கருதப்பட்டவர்களும் கூடிய நிஜ வாழ்க்கையில் நெருக்கமாண நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர். உண்மையில் ஒரே தொழிலில் இருப்பவர்கள் நெருக்கமான நண்பர்கள் அமைவது சில நேரங்களில் இயல்பான ஒன்றுதானே! அந்த வகையில் கோலிவுட்டின் நட்சத்திர நண்பர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


நயன்தாரா - திரிஷா 


கோலிவுட்டில் திரிஷா கடந்த 2002-ஆம் ஆண்டு அறிமுகமானார். அதற்கு அடுத்த வருடத்தில்தான் நயன்தாரா சினிமாவில் காலடி வைத்தார். சமகால நடிகை என்பதால் இருவருக்கும் போட்டிகள் இருந்தன. இதன்  காரணமாகவே இருவரும் நீண்ட காலம் பேசிக்கொள்ளவே இல்லையாம். அதன் பிறகு விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற இருவரும் ஃபார்மலாக பேச ஆரமித்து பிறகு மனம் விட்டு பேசி தோழிகளாகிவிட்டனர். அதன் பின்னர் ட்விட்டரில்  திரிஷா ஷேர் செய்த பதிவு ஒன்றும் கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது “ நயன்தாராவின் நட்பு என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது. இரண்டு தோழிகள் சந்திக்கும் தருணங்களை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது “ என குறிப்பிட்டிருந்தார் . அந்த சந்திப்பிற்கு பிறகு இன்றளவும் இவர்கள் சிறந்த தோழிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.




 


ஆர்யா-விஷால் 


இவர்கள் இருவருக்குமான நட்பு ரசிகர்கள் அறிந்ததே ! . ஆர்யா- விஷால் நட்பு  சினிமாவிற்கும் அப்பாற்பட்டது. சினிமா போட்டிகள் காரணமாக ஆரம்பத்தில்  இவர்களின் நட்பிலும் விரிசல் விழுந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இரு தரப்பும் அதனை திட்டவட்டமாக மறுத்தன.  பாலாவின் ’அவன் இவன்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த பின்னர் இருவருக்குமான பிணைப்பு  அதிகமானது. சமீபத்தில் ஆர்யா- சாயிஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தை  பிறந்தது.  “ நான் மாமா ஆகிட்டேன்“ என விஷாலே இந்த அறிவிப்பை  முதன் முதலில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




ஜீவா - ஜெயம் ரவி 


இவர்கள் இருவரும் அலப்பறை இல்லாத நட்பிற்கு உதாரணமானவர்கள் என்கின்றர் இவர்களுக்கு நெருக்கமானவர்கள். ஜெயம் ரவி தனது மகனின் முதல் பிறந்தநாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய முடியாத சூழலில், பிஸியாக இருந்திருக்கிறார். அப்போது ஜீவாதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மனைவியுடன் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டாராம் . “ ஜீவா என் நண்பன் என்பதையும் தாண்டி , என் குடும்பத்தில் ஒருவன் “  என நேர்காணல் ஒன்றில் நெகிழ்ந்துள்ளார் ஜெயம் ரவி.




 


அனுஷ்கா - அமலாபால் 


தெய்வ திருமகள் படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். அங்கிருந்து தொடங்கியதுதான் இவர்களின் நட்பு . அனுஷ்கா மற்றும் அமலா பால் இருவருக்குமான கால்ஷீட்டை ஒரே மேனேஜர்தான் கவனித்துக் கொள்வதாகவும் செய்திகள் வெளியானது. அந்த அளவிற்கு நெருக்கமானவர்கள்.  நடிகைகள்  மொழியில் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களுக்கிடையே புரிதல் வேற லெவலில் இருக்குமாம். இவ்வளவு ஏன் இருவருக்கும் இடையில்  “brubrubru” என்ற  ஒரு கோட் வேர்ட் கூட உள்ளதாம் . அதனை சந்திக்கும் போதெல்லாம் கூறுவார்களாம்.




தமன்னா- சுருதிஹாசன்


தமன்னா மற்றும் சுருதிஹாசன் இருவரும் ’அகடு’ என்ற தெலுங்கு படப்பிடிப்பில்தான் முதன் முதலில் சந்தித்துக்கொண்டனர். அந்த படத்தில் தமன்னா கதாநாயகியாகவும், சுருதிஹாசன் குத்து பாடல் ஒன்றில் நடனமாடவும் கமிட்டாகியிருந்தனர். அதன் பிறகு இவர்களுக்கிடையில் நட்பு வலுவானது. அடிக்கடி இவர்கள் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். சுருதிஹாசன் ஒருமுறை அளித்த பேட்டியில், “தமன்னா போன்ற பெண்ணின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் , அவள் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவளை நானே திருமணம் செய்துக்கொள்வேன் “ என குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு ஆழமானது இவர்களின் நட்பு .