இளம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி  கொண்டாடப்பட உள்ள 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “பெருங்காற்றே” என்ற ஆல்பம் பாடலை உருவாக்க உள்ளனர்.  பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த  பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அதில் நடிக்கவும்  உள்ளார். ஏ.ஆர்.ராஜசேகர் இந்த பாடலை இயக்குகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைப்பெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் “  1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது ’தேவாரம் ’ தமிழ் பாடல் இசைக்கப்பட்டு  , தேசிய கொடி  ஏற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 75 வது சுதந்திர தினத்தன்று  சுதந்திர தினத்திற்கான  பிரத்யேக தனிப்பாடலுக்கு இசையமைப்பதற்கான  வாய்ப்பு  எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது “ என்றார். 




இந்நிலையில் “ மொழியையும்  தேசியத்தை ஒன்றாக பார்க்கிறீர்களா?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ் குமார், “ எனக்கு என் நாடு மீது பற்று இருக்கிறது. ஆனால் முதலில் எனக்கு மொழி, பிறகுதான் தேசியம் “ என்றார். மேலும் “ நமக்கான  அடிப்படை உரிமைகள் மற்றும் மொழிக்கான உரிமைகளை  நாம்தான் கேட்டுதான் பெற வேண்டும் , மொழிக்கான உரிமை என்பது இடத்திற்கு இடம் மாறுபடும் அதை பொறுத்தே உரிமையும் தேவையும் மாறுபடும்” என தெரிவித்தார். ’பெறுங்காற்றே’ பாடல் சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட உள்ளது. இந்த பாடலில் தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 12 நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளனர். அதில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். மேலும் அந்தந்த மொழிகளை சேர்ந்த பாடலாசிரியர்கள் “பெருங்காற்றே” தனிப்பாடலுக்கான வரிகளை எழுத உள்ளனர்.  12 பாடகர்கள் பாட உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.





அதுமட்டுமல்லாமல் பாடலுக்கான காட்சிகளை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முக்கியமான சில இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் , ஆசாத் கொலை செய்யப்பட்ட இடம் , வேலூரில் துப்பாக்கிச்சூடு நடந்த இடம்  என முக்கியமான சுதந்திர போராட்ட நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக இந்த பாடல் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “வண்ணங்களால் இணைவோம் “ என்ற கூற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவின் காலாச்சாரங்களை அறிந்துக்கொள்ளும் விதமாக  ”பெருங்காற்றே “ பாடல் அமையும் என்றும் தனிப்பாடல் குழுவினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் சுதந்திர தினத்தை முன்னிட்டு யூடியூப் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.