ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


'செத்தும் ஆயிரம் பொன்' என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் புதிய படம் ‘டியர்’. இதில் ஜிவி பிரகாஷும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை ரோஹிணி, தலைவாசல் விஜய், பிளாக்‌ஷீப் நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 




இந்தப் படத்தின் ஒரு பாடலை ராப் பாடகரான அறிவு எழுதி, பாடியும் இருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள டியர் படத்தை வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதன்முதலாக ஜிவி பிரகாஷும், ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிப்பதால் டியர் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை, இடுக்கி, குன்னூர் பகுதிகளில் என நடந்த படப்பிடிப்பு பணிகள் 35 நாட்களில் முடிந்துள்ளன


இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. டியர் என்ற வடிவில் கேக் வெட்டிய படக்குழு குரூப் புகைப்படம் எடுத்தும் பகிர்ந்துள்ளனர். படத்தை விரைவில் திரையிட போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 


முன்னதாக கடந்த மே மாதம் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது. அதில், குறிப்பிடப்பட்டிருந்த ‘தி ஸ்டோரி’ என்ற வார்த்தையில் ‘ஸ்டோரி’ என்பது அடிக்கப்பட்டு, ஸ்னோரிங் பிகின்ஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், கதையின் ஹீரோயினாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு குறட்டை பழக்கம் இருப்பதையும் அதை சமாளிக்க முடியாமல் ஜிவி பிரகாஷ் தவிப்பதும் படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






அண்மையில் மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட்நைட்’ படமும் குறட்டை விடும் பழக்கத்தை கதையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. குறட்டை பழக்கத்தால் மணிகண்டன் சந்திக்கும் அவமானங்கள், கணவன் - மனைவிக்குள் ஏற்படும் விரிசல்கள், மணிகண்டனின் குற்ற உணர்ச்சி, காதல் பிரேக்கப் காட்சிகள் குட்நைட் படத்துக்கு வரவேற்பை பெற்று தந்தது. அந்த வரிசையில் ஹீரோயினுக்கு குறட்டைப் பழக்கம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை டியர் படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.