தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து தான் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானார். இந்த பிரபலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி வந்த ஜிபிமுத்துக்கு பிக்பாஸ் சீசன் 6 யில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.


 






இதனையடுத்து முதல் ஆளாக உள்ளே சென்ற ஜிபிமுத்து, மகனை பார்க்க முடியாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறி, முதல் ஆளாக வெளியேவும் வந்து விட்டார்.




வெளியே வந்த மகன் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட அவர், சினிமா படங்கள் நடிப்பது மட்டுமல்லாது தனியார் கடைகளையும் திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்பா சென்டரை நடிகர் கூல் சுரேஷூடன் இணைந்து அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், “   “ நான் கூல் சுரேஷ் அளவிற்கு வர முடியாது. அவர் கத்தும் அளவிற்கு என்னால் கத்த முடியாது. எனக்கு அரசியலுக்கு வர எண்ணம் இல்லை. என்னை எந்தக்கட்சியும் கூப்பிட வில்லை. எனக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாது. விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் அது மிகப் பெரிய விஷயம். வாய்ப்பு வந்தால் நிச்சயம் நான் நடிப்பேன்.” என்று பேசினார். 




முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து பேசியிருந்த ஜிபிமுத்து  “ எனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை அதுதான் காரணம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவனை மருத்துவமனையில் காண்பித்து இருந்தேன். அப்போதுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதனால் நான் அப்படியே பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விட்டேன்.


அதனால் உள்ளே இருந்த எனக்கு, மகன் உடல்நிலை குறித்த கவலை தொடர்ந்து இருந்தது. அதனால்தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். இப்போது அவன் நன்றாக இருக்கிறான். பிக்பாஸ் அனுபவம் எனக்கு புதுவிதமாக இருந்தது. கமல்ஹாசனை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன உடன் அவர் தன்னை பார்த்து க்யூட் என கூறிய போது நான் சிலிர்த்து போனேன்.” என்று பேசினார்.