கோலிவுட்டில் மெல்லிசையான ஒரு தம்பதிகள் என்றால் அது ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவிதான். நான் ஏன் மெல்லிசை என்கிறேன் என்றால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய  டூயட் பாடல்களை கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் கேட்டுப்பாருங்களேன்! அது எங்கேயோ உங்களை அழைத்துச்செல்லும் !இசைப்பிரியர்களின் ஃபேவரெட் காம்போ! இருவரின் குரல்களிலும் ஏதோ ஒரு மேஜிக் இருக்கத்தானே செய்கிறது! காதல் தம்பதிகளான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இன்று தங்களது 8 வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களது காம்போவில் வெளியான சூப்பர் ஹிட் மெலடி பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



பிறை தேடும் இறவிலே உயிரே ! 


பள்ளி பருவத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நேரத்தில் வெளியான பாடல்தான் இது. 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பிடித்திருந்தது. அத்தனை ஆறுதலான பாடல் !




மனசெல்லாம் மழையே !


திருமணத்திற்கு முன்னதாக இவர்களது காம்போவில் வெளியான மற்றுமொரு பாடல்தான் மனசெல்லாம் மழையே . இந்த பாடல் 2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் இடம்பெற்றிருந்தது.




யாரோ இவன்! யாரோ இவன் !


ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் காதலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாடிய பாடல் இது. ஹஸ்கி வாய்ஸில் இருவரும் வருடியிருப்பார்கள் . சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் என்.ஹெச்4 திரைப்படத்தில் இந்த பாடல் வெளியாகியியிருந்தது.இந்த படம் இவர்கள் திருமணமான அதே ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.



யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது ! 


கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியாகியிருந்த தலைவா படத்தில் இடம்பெற்றிருந்த ஆல் டைம் ஃபேவரெட் மெலடிதான் “யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது” இந்த பாடலையும் காதல் தம்பதிகள் இணைந்து பாடியிருப்பார்கள்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். சால்சா பாணியில் உருவாகியிருந்த இந்த பாடல் ஜி.வி , சைந்தவியின் மென்மையான குரலும் , துள்ளல் இசையும் கலந்த மெட்டு !




என்னாச்சு.... ஏதாச்சு 


ஜி.வி.பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையில் உருவான திரைப்படம்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. இந்த படத்தில் இடம்பெற்ற பக்கா ரொமாண்டிக் பாடல்தான் ’என்னாச்சு ஏதாச்சு ...ஏதேதோ ஆயாச்சு’. இந்த பாடலை மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடியிருந்தார் ஜி.வி .பிரகாஷ் . இடை இடையே கல்யாணி பிரதீப் சில போஷன்களை பாடியிருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவியின் குரல் மட்டும் ஒருபக்கம் ஆடியன்ஸை இழுக்கும்!