பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதி மனக்கசப்புகள் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இத்தகவலை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.


‘மன அமைதிக்காக பிரிந்துவிட்டோம்’


இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி (G.V.Prakash Kumar - Saindhavi) இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். "சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.


இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான்  சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும்” எனப் பகிர்ந்துள்ளனர்.


 






பள்ளிப்பருவக் காதல் டூ திருமணம்


பள்ளிப்பருவக் காதலைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் திருமணம் செய்து கொண்டு தமிழ் திரையிசை உலகில் பிரபல தம்பதியாக அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடி ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி. இவர்களுக்கு அன்வி எனும் 4 வயது பெண் குழந்தை உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள், இருவரும் இணைந்து பாடிய பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


யாரோ இவன், பிறை தேடும் இரவிலே, யார் இந்த சாலையோரம், வெண்மேகம் போலவே உள்ளிட்ட இருவரும் இணைந்து பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ப்ளே லிஸ்ட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் தங்கள் பிரிவை அறிவித்துள்ளது இவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.