தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த மனோஜ் - கியான் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 


பொதுவாக சினிமாவை பொறுத்தவரை பாடல்களுக்கு என்றும் அழிவே கிடையாது என சொல்வார்கள். அது எந்த காலத்திலும் வித்தியாசமான சிந்தனைகளை கொண்ட தலைமுறையினரையும் ஏதோ ஒருவகையில் கவரும். ஆனால் இங்கு நாம் நினைக்கும் ஒரு விஷயம் தவறாக இருக்கும். அது அந்த பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் பற்றி தான். நாம் சினிமாவை பொறுத்தவரை இளம் இசையமைப்பாளர்கள் மூலம் மூத்த இசையமைப்பாளர்கள் வரை ஏராளமானவர்கள் உள்ளனர். ஆனால் நாம் ஒரு பாடலின் இசையை கேட்டு விட்டு இவர் தான் இசையமைப்பாளர் என யோசிக்காமல் முடிவு செய்து விட்டு, பின்னால் வேறு ஒருவர் தான் இசையமைப்பாளர் என தெரிந்ததும், அவரின் பாடல்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். 


அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இரட்டை இசையமைப்பாளர்களான மனோஜ் - கியான். 1981 ஆம் ஆண்டு ரூஹி என்ற இந்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80களில் சினிமாவில் உச்சத்தில் இளையராஜா இருந்த காலக்கட்டத்தில் இருவரும் தமிழ் சினிமாவுக்குள் வந்தனர். இவர்களை அழைத்து வந்தது திரைப்பட கல்லூரி மாணவராக சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய உந்து சக்தியாக பின்னால் வந்தவர்களுக்கு திகழ்ந்த ஆபாவாணன் தான். 



முதல் படமாக 1986 ஆம் ஆண்டு ஊமை விழிகள் வெளியானது. இந்த படத்தில் தோல்வி நிலை என நினைத்தால், மாமரத்து  பூ எடுத்து, ராத்திரி நேரத்து பூஜையில் ஆகிய 3 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுவும் தோல்வி நிலை என நினைத்தால் பாடல் பலருக்கும் இன்றும் ஆறுதல் கொடுக்கும் பாடலாக அமைந்தது. தொடர்ந்து உழவன் மகன், மேகம் கருத்திருக்கு, பரிசம் போட்டாச்சு, வைராக்கியம் , வெளிச்சம் , செந்தூரப்பூவே, தாய்நாடு , உரிமை கீதம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 


மனோஜ் - கியான் இசையில் மிகப்பெரிய ஹிட் ஆல்பம் என்றால் அது ‘செந்தூரப்பூவே’ தான். பி.ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் எவர் க்ரீன் ஹிட்டாகியது. தொடர்ந்து ஒரு காலக்கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். 


இதில் கியான், தனது பெயரை  கியான் வர்மா என போட்டு இணைந்த கைகள் படத்தில் இசையமைத்தார். அப்படத்தில் அந்தி நேர தென்றல் காற்று, மலையோரம் குயில் கூவ கேட்டேன்  போன்ற பாடல்கள் தேனிசையாக ரசிகர்களுக்கு அமைந்தது. மனோஜ் தன் பெயரை மனோஜ் பட்நாயகராக டைட்டில் மாற்றிக் கொண்டு பல படங்களுக்கு இசையமைத்தார். இவர் விஜய் நடித்த என்றென்றும் காதல், பிரசாந்த நடித்த குட்லக் ஆகிய படத்துக்கும் இசையமைத்துள்ளார். 


உண்மையில் காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்கள் என்றைக்கும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்..!