ஏ.வி.எம்., தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனம். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கனடா என சர்வ மொழிகளிலும் படங்களை தயாரித்த பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம். 1935-ஆம் ஆண்டில் இருந்து திரை உலகில் தனிக்கொடி கட்டி பறக்கும் நிறுவனம். 1997-ஆம் ஆண்டில் தனது 50-வது ஆண்டு படமாக மின்சாரக்கனவு திரைப்படத்தை தயாரித்த ஏவிஎம், அதன் பின் படம் எடுப்பதை நிறுத்தியது. அதற்கு பல காரணம் கூறப்பட்டாலும், ஏவிஎம் படம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயம். இப்போது 2K ஆண்டு பிறக்கிறது. 19K முழுவதும் படம் செய்து 2000-வது ஆண்டில் படம் எடுக்காமல் இருந்தால் எப்படி, ஏவிஎம் எல்லா தலைமுறையோடும் பயணிக்க வேண்டும் என ஏவிஎம் சரவணன் மற்றும் குகன் விரும்பினர். அப்போது அவர்களது சாய்ஸ், கமர்ஷியல் இயக்குனராக கலக்கிக் கொண்டிருந்த இயக்குனர் சரண் மீது விழுந்தது. 




ஏவிஎம்., சரவணனை சூடேற்றிய சரண்!


ஏவிஎம் சரவணன் மற்றும் குகனை சந்திக்க அவர்களது அலுவலகம் வருகிறார் சரண். பேச்சு வார்த்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர்களிடம் 10 நிபந்தனைகளை விதிக்கிறார் சரண். தலைமுறைகளை கடந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம், ஒரு சின்ன டைரக்டர் நிபந்தனை விதிப்பது என்பது புதிது. அதிலும், அவர் வைத்த கோரிக்கைகள் அதை விட கொடிது. இதோ அந்த கோரிக்கை...



  • கதை மற்றும் தலைப்பு என்னுடைய சாய்ஸ்: அதில் ஏவிஎம் தலையிடக்கூடாது

  • எந்த காரணம் கொண்டும் தயாரிப்பாளர்கள் சூட்டிங் ஸ்பார்ட் வரக்கூடாது

  • எடிட் ரூம் பக்கம் வரவே கூடாது; முழுதும் என்னுடைய விருப்பமாக இருக்க வேண்டும்

  • நான்  சொல்லும் இசையமைப்பாளர்தான் பணியாற்ற வேண்டும்


அவர் சொன்னது 10 நிபந்தனை. இப்போது 4 தான் முடிந்திருக்கிறது. அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஏவிஎம்., சரவணன் இப்போது குறுக்கிடுகிறார். அவரால் அந்த கோரிக்கையை ஏற்க முடியவில்லை. கேட்கவும் முடியவில்லை. 




கெட்-அவுட் சொன்ன சரவணன்... உறுதியாக இருந்த சரண்!


4-வது கோரிக்கை வைக்கும் போதே மோதல் துவங்கியது. ‛‛ஏவிஎம் என்கிற நிறுவனத்தில் பல இசையமைப்பாளர்கள் பயணித்திருக்கிறார்கள். நாங்கள் பலருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். அந்த வகையில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு எங்களின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்திருக்கிறோம். அதை மாற்ற முடியாது,’’ என்கிறார் சரவணன். ‛‛இல்லை சார்... நானும்-பரத்வாஜ் சேரும் கூட்டணிக்கு நல்ல வேல்யூ இருக்கிறது. மார்க்கெட்டும் உள்ளது,’’ என சரண் கூற, ‛‛கார் ஷெட்டில் மியூசிக் போடுபவன் எல்லாம் என் படத்திற்கு மியூசிக் போட முடியாது... யூ கேன் கெட்-அவுட்...’’ என சரணை வெளியேறும் படி எச்சரிக்கிறார் சரவணன். அருகில் இருந்த குகன், சரவணனை சமரசம் செய்து, ‛‛இருங்க அவர் 10 கோரிக்கை சொன்னார்... 4 தான் சொல்லிருக்கார். எஞ்சியிருக்கிற 6 கோரிக்கையையும் கேட்கலாம்,’’ என கூற, சரவணனும் ஏற்றுக்கொண்டார். இப்போது 10 கோரிக்கையை சரண் சொல்லிவிட்டார். 9 கோரிக்கையும் ஏற்கப்பட்டது. ஆனால் அந்த 4வது கோரிக்கையான இசையமைப்பாளர் கோரிக்கை தான் சிக்கலில் உள்ளது. ‛எங்களுக்காக கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்...’ என்கிறார் சரவணன். ‛இல்லை சார்... நீங்க தான் முடிவு பண்ணனும்... என்னோட கோரிக்கை இது தான். இது ஓகே என்றால் படம் பண்ணலாம்,’ என அங்கிருந்து புறப்படுகிறார். அவர் வீட்டிற்கு சென்றடையும் முன்பே அடுத்த 20வது நிமிடத்தில் சரணுக்கு அழைப்பு வருகிறது. 




எனக்கு 15... உனக்கும் 15...!


ஏவிஎம் சரவணன் பேசுகிறார்... ‛‛சார்... இப்போ தான் குகன் சொன்னார்... நீங்க சொன்ன மியூசிக் டைரக்டர் வேற... நான் நெனச்ச மியூசிக் டைரக்டர் வேற... நான் தான் குழம்பிட்டேன். உங்க மியூசிக் டைரக்டரையே வெச்சுக்கலாம். நீங்க தான் படம் பண்றீங்க. உங்க 10 கோரிக்கையும் எங்களுக்கு ஓகே,’’ என அவர் கூற, சரணுக்கு டபுள் சந்தோசம். மறுநாளே ஏவிஎம் அலுவலகத்தில் சந்திக்கிறார்கள். ஏவிஎம்-ல் 10ம் நம்பர் மேக்கப் அறை ஒன்று உள்ளது. அது தான் எம்.ஜி.ஆர்., ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் பயன்படுத்திய அறை. ‛‛இதை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்; ஒரு 15 நாளில் உங்களுக்கு வேறு அலுவலகம் ஏற்பாடு செய்கிறோம்,’’ என சரவணன் கூறுகிறார். ‛‛ஓகே சார்... நானும் அந்த 15 நாட்களுக்குள் உங்களுக்கு 3 கதைகளை கூறுகிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்...’ என, உறுதியளிக்கிறார் சரண். சொன்னபடி ஏவிஎம்.,ல் புதிதாக ஒரு கட்டடம், வெறும் 15 நாட்களில் சரணுக்காக தயாரானது. அவரும் சொன்னபடி 3 கதைகளை கூற, ஒரு கதையை சரவணன் டிக் அடித்தார், அது தான் ‛ஜெமினி’. 




சரணை டார்ச்சர் செய்த ஊழியர்கள்!


கதை ரெடியானதுமே சரண் வழக்கம் போல பணிகளில் மும்முரம் காட்டுகிறார். ஏவிஎம்-5 ஆண்டுகளுக்குப் பின் தயாரிக்கும் படம் என்பதால், அதன் ஊழியர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்றினர். சரண் வரும் போதெல்லாம், ‛சார்... முதலாளி ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் எடுக்கிறார்... கொஞ்சம் நல்ல படமா எடுங்க... நல்ல முதலாளி சார்... அவங்களுக்கு உதவியா படம் எடுங்க....’ என யாராவது ஒரு ஊழியர், சரணிடம் கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு விஸ்வாசமான ஊழியர்களை ஏவிஎம் பெற்றிருந்தது. அவர்களது சொந்த ஸ்டூடியோவில் படம் தயாரானதால் ஒட்டுமொத்த ஊழியர்களும் அங்கு மெனக்கெட்டனர். இப்போது கதை முழுவதும் முடிந்தது. ஏவிஎம்-சரவணனை சந்தித்து அதை காண்பிக்கிறார் சரண். அவருக்கு ஒரே திகைப்பு. வெறுமனே கதை மட்டும் அங்கு இல்லை. எப்போது சென்சார் போக வேண்டும், எப்போது ரிலீஸ் ஆக வேண்டும் என்பன உள்ளிட்ட ஒட்டுமொத்த செட்யூலும் அதில் இருந்தது. அப்போது தான் சரவணன் சாருக்கு, சரண் மீது முழுமையான நம்பிக்கை வந்தது. 




டாமினேஷனை உடைக்க சரண் செய்த லீலை ‛ஜெமினி’


சரணுக்கு மனதில் ஒருவித அலை ஓடிக் கொண்டே இருந்தது. எப்போதுமே தாங்கள் எடுக்கும் படத்திற்கு ஏவிஎம்-ன் என்கிற முகப்பை அந்நிறுவனம் பயன்படுத்தும். அதை அவர் ‛டாமினேஷனாக’ நினைத்தார். அதை உடைக்க நினைத்தார். ‛ஏவிஎம்-ன் ஜெமினி’ என பெயர் வைத்தார். ஏவிஎம் போலவே ஜெமினியும் ஒரு பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம். சரவணனிடம் அந்த பெயரை கூறியதும், அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு சர்குலர் அனுப்பி, இந்த தலைப்பு ஓகேவா என கருத்துக் கேட்டார். அனைவரும் ஓகே என்றனர். உடனே அவரும் ஓகே என்றார். இருந்தாலும் ஜெமினி என பெயர் இருப்பதால், ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பாலசுப்பிரமணியன், ஜெமினி லேப் உள்ளிட்ட அனைவரிடமும் ஒப்புதல் பெற்று, ஜெமினி இறுதியில் ஏவிஎம்-ன் ஜெமினி ஆனது. சரணின் ஜெமினி என பெயர் வராது என்கிற ரீதியில் தான் சரண் இந்த ஏற்பாட்டை செய்திருப்பார். ஆனால் ஏவிஎம் சரவணன் டைட்டிலில் ஒரு மாற்றம் செய்தார். ‛எல்லாம் ஓகே... ஜெமினிக்கு கீழே சரண் என இயக்குனர் பெயரை போடுங்கள்,’’ என உத்தரவிட்டார். இப்போது ‛ஏவிஎம்-ன் ஜெமின்... சரண்’ என மாற்றப்பட்டது. 




சுவிட்சர்லாந்தில் சரண்... படம் பார்த்த சரவணன்!


ஒரு படம் முழுவதையும் ஷெட்டில் எடுக்க முடியுமா என்றால், முடியும் என்பது தான் ஜெமினி உருவான வரலாறு. கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு ஏவிஎம்-ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டது. எஞ்சியவை பாடல்களுக்காக வெளிநாடு சென்றவை. படத்திற்காக பிரமாண்ட ஷெட் ஏவிஎம்.,யில் போடப்பட்டிருந்தது. திடீரென அங்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். ஆனால் ஷெட் உள்ளே வரமாட்டார்கள். இயக்குனரின் நிபந்தனைகள் இருக்கிறதே. அவர்கள் வந்த விபரத்தை உள்ளே கூறியதும், சரண் வெளியே வந்து அவர்களை சந்திப்பார். அவரிடம் ஆலோசித்துவிட்டு புறப்படும் போது, ‛பார்த்தீங்களா... நான் உள்ளே வரலே...’ என ஒவ்வொரு முறையும் சரவணன் கூறிவிட்டு தான், அங்கிருந்து சிரித்து கிளம்புவார். அந்த அளவிற்கு முழு சுதந்திரம் இயக்குனருக்கு தரப்பட்டது. படத்தை முடித்துவிட்டு பாடல்கள் சூட் செய்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுவிட்டார் சரண். இங்கு படம் முடிந்து எல்லாம் தயாராக உள்ளது. பாடல்கள் வந்ததும் சேர்த்து, பின்னணி போட்டோல் அனைத்தும் ஓவர். சுவிட்சர்லாந்தில் சரணுக்கு போன் செல்கிறது. ‛நாங்கள் படத்தை இங்கு பார்க்கட்டுமா...’ எனக்கேட்கிறார் சரவணன். ‛பாருங்க சார்...’ என சரண் அனுமதி தந்தாலும், உள்ளூர ஒரு பயம்.




படத்தை பார்த்து நம்பிக்கை இழந்த சரவணன்!


படம் பார்த்தபின் சரணுக்கு போன் செய்த சரவணன், ‛மனோரமா ஆச்சி நம்ம கம்பெனிக்கு 24 படம் பண்ணிருக்காங்க. இந்த படத்தில் நடித்தால் 25வது படமா இருக்கும்... அதோடு கொஞ்சம் அம்மா சென்டிமெண்ட் இருந்தால் படம் நல்லா இருக்கும்... ஏதாவது செய்ய முடியுமா...’ எனகேட்கிறார் சரவணன். படமே முடிந்துவிட்டது, இப்போது இந்த கோரிக்கை வருகிறது, ஆனால் சரண் அசரவில்லை. ‛சார்... நான் சென்னை வந்திடுறேன்... எனக்கு ஒரேஒரு நாள் மனோரமா கால்ஷிட் வாங்கிக் கொடுங்க... சரி பண்ணிடலாம்...’ என்கிறார் சரண். ‛ஒரு நாள் போதுமா...’ என கேட்கிறார் சரவணன். ‛போதும்...’ என சரண் கூற, அவர் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக மனோரமா காட்சிகளை படம்பிடிக்கிறார். ஒரே நாளில் அதை முடித்து படத்தில் ரவுடிகளுடன் ஒரு தாய் பயணிப்பதைப் போன்று அந்த காட்சிகளை சில இடங்களில் சேர்த்து, படம் முழுக்க மனோரமா வருவதைப் போல காட்சியை முடிக்கிறார் சரண். இப்போது ஒட்டுமொத்த படமும் முடிந்துவிட்டது. படத்தை இயக்குனருடன் அமர்ந்து பார்க்கிறார் சரவணன். படத்தை பார்த்துவிட்டு, அவரே ஒரு ஒப்பீடு செய்கிறார். ‛சகலகலா வல்லவன் மாதிரி இருக்கா...? இல்லை. முந்தானை முடிச்சு மாதிரி இருக்கா...? இல்லை. பாயும் புலி மாதிரி இருக்கா...? இல்லை! இப்படி தன்னுடைய ஹிட் படங்களுடன் ஒப்பிடுகிறார். எதுவுமே அதனோடு ஒத்துப்போகவில்லை. உண்மையில் சரவணன் பயந்துவிட்டார்.  படம் மீது அவருக்கு நம்பிக்கை வரவில்லை. 




ரீலுடன் சென்று மொட்டை அடித்த ஏவிஎம் சரவணன்!


5வது ரிலை எடுத்துக் கொண்டு, அனைவரையும் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார் சரவணன். அங்கு படம் வெற்றிபெற வேண்டி மொட்டை அடித்தார் சரவணன். ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்து விடுமோ என்கிற அச்சத்தில் படம் வெளியாகும் முன்பே மொட்டை அடித்து வழிபட்டதை பார்த்து, சரணுக்கு தர்மசங்கடம். ஒட்டுமொத்த யூனிட்டும் அந்த வழிபாட்டில் பங்கேற்றது. பப்ளிசிட்டியில் எப்போதுமே ஏவிஎம்- தனி ரகம். அது தான் அவர்களின் வெற்றிக்கான ரகசியமும் கூட. அந்த வகையில் ஜெமினிக்கு சரவணன் சில ட்ரிக்ஸ் செய்தார். ஓ போடு பாடலின் வரிகளை விளம்பரங்களில் பயன்படுத்தினார். சரணுக்கு எதுவும் புரியவில்லை. ‛இதை ஏன்... தூக்கி சுமக்கிறார்... இதில் அப்படி என்ன இருக்கிறது...’ என்றெல்லாம் அவர் மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டார். படம் வெளியாகும் வரை அவருக்குள் அந்த கேள்வி இருந்தது. வெளி வந்த பிறகு தான் ஓ போடு பாடல், ஜெமினி படத்தை எங்கோ கொண்டு சென்றது. முன் கூட்டியே அந்த வெற்றியை கணித்தவர் சரவணன் மட்டுமே. ஒரு கமர்ஷியல் படம் இப்படி ஒரு வெற்றியை பெற முடியுமா... என்பதற்கு சரியான உதாரணம் ‛ஜெமினி’. அதில் நடித்த விக்ரம், கிரண் உள்ளிட்ட அனைவருமே வேறு லெவலுக்கு செல்ல ஜெமினி காரணமானது. அதோடு அதே ஜெமினியை தெலுங்கிலும் ஏவிஎம்- அதே சரணை வைத்து எடுத்து முடித்தது. அத்துடன் அடுத்தடுத்து ஏவிஎம் தயாரிப்பு படங்கள் வரவும் ஜெமினி காரணமானது.