இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்த அவரது படத்தின் போஸ்டர் ஒன்று காளியை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைபிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் இந்த போஸ்டர் தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதியவும், படத்தின் மீது தடை விதிக்கவும் புகார் அளித்துள்ளார். இவர் பசுப் பாதுகாப்பு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்பினர் பலரும் இயக்குநர் லீனா மணிமேகலையைக் கடுமையாக சாடி வருகின்றனர். 







தன் மீதான இணையத் தாக்குதல்களுக்கு பதிலளித்துள்ள இயக்குநர் லீனா மணிமேகலை, `“எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதாக இயக்குநர் லீனா மணிமேகலை அதன் போஸ்டரைப் பகிர்ந்து போது குறிப்பிட்டிருந்தார்.


தன் மீதான இணையத் தாக்குதல்களைத் தொடர்ந்து இயக்குநர் லீனா மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட்களுக்குத் தடை விதித்துள்ளார்.


இந்தப் படத்தின் சர்ச்சை குறித்து பதிவிட்டுள்ள இயக்குநர் லீனா மணிமேகலை, `ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.