கர்நாடகாவில் சினிமா மற்றும் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை சைத்ராவை அவரது கணவர் கடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைத்ராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறையில் நடிகை சைத்ராவின் சகோதரி லீலா புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தர்ஷன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வரும் ஹர்ஷவர்தன் திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார் இவரும் எனது தங்கையுமான நடிகை சைத்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளார்.
இப்படியான நிலையில் தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக இந்த ஜோடி பிரிந்துள்ளது. சைத்ரா தனது மகளுடன் மகடி சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தார். அவரது கணவரான ஹர்ஷவர்தன் ஹாசன் பகுதியில் வசித்து வருகிறார். கணவருடரான பிரிவுக்குப் பிறகு சைத்ரா தொடர்ந்து சினிமா மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹர்ஷவர்தன் தனது மகளை பார்க்க வேண்டும் என்பதால் தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சைத்ராவிடம் கேட்டார். இதற்கு சைத்ராவும், எனது குடும்பத்தினரும் அனுமதி மறுத்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த ஹர்ஷவர்தன் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி தனது மனைவி சைத்ராவை கடத்தி மிரட்டினால் தனது மகளை பெற்றுக் கொள்ளலாம் என அவர் நினைத்துள்ளார்.
இதனை தனது நண்பர் கௌசிக் மூலம் நிறைவேற்ற அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி அவருக்கு முன் பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்படி கௌஷிக் சைத்ராவை தொடர்பு கொண்டு மைசூரில் ஒரு படப்பிடிப்பு இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளார். இந்த நிலையில் சீரியல் தொடர்பாக மைசூருக்கு தான் செல்ல உள்ளதாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனது குடும்பத்திடம் சைத்ரா தெரிவித்துவிட்டு புறப்பட்டு உள்ளார்.
காலை 8 மணி அளவில் மைசூர் செல்வதற்காக சைத்ராவின் வீட்டுக்கு கௌஷிக் காரில் வந்துள்ளார். இவர்களுடன் மூன்றாவதாக ஒரு நபரும் காரில் இருந்துள்ளார். அந்தக் கார் அங்கிருந்து புறப்பட்டு மைசூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது அங்கு வந்த ஹர்ஷ்வர்தன் சைத்ராவுடன் சண்டையிட்டு அவரை தன்னுடைய காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் சைத்ரா தனது நண்பர் க்ரிஷிடம் தான் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்க அந்த நண்பர் உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அன்று மாலையில் ஹர்ஷ்வர்தன் சைத்ராவின் தாயார் சித்தமாவை தொடர்புகொண்டு தான் உங்கள் மகளை கடத்தி வைத்திருப்பதாகவும், குழந்தை நான் வளர்க்க விரும்புகிறேன். அதனால் நான் குறிப்பிடும் இடத்திற்கு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். குழந்தையை அழைத்து வந்தால் சைத்ரா பாதுகாப்பாக வருவார் எனவும் உறுதியளித்துள்ளார் இதனை தொடர்ந்து சைத்ராவின் குடும்பத்தினர் காவல் துறையை அணுகினர்.
அதன்பெயரில் வழக்குப்பதிவு செய்ட பேடராயனபுரா காவல்துறையினர் ஹர்ஷ்வர்த்தனை தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னை காவல்துறை தேடுவதை அறிந்த அவர் சைத்ராவை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.