Father Son Relationship Movies in Tamil:தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் தந்தை - மகன் உறவை அழகாக எடுத்துரைத்த படங்களைப் பற்றி காணலாம். 




  • தவமாய் தவமிருந்து 








2005ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் ராஜ் கிரண், சரண்யா, பத்மப்பிரியா, மிர்ச்சி செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக அப்பா படும் கஷ்டங்களையும்,  உறவுகளை பற்றி எண்ணக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நடுத்தர குடும்பத்தின் தந்தையின் வாழ்க்கையையும் கண்கலங்க சொல்லியது இப்படம். உண்மையில் எத்தனை தவங்கள் இருந்தாலும் இப்படி ஒரு‘தவமாய் தவமிருந்து’ தமிழ் சினிமாவுக்கு இனி கிடைக்காது. 




  • இந்தியன்






 1995ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தனர். சுதந்திரப் போராட்ட தியாகியான தந்தை சமூகத்தின் ஊழலில் தன் மகனுக்கும் பங்கிருப்பதை கண்டு அவருக்கு எதிராக சாட்டையை சுழற்றுவதே இப்படத்தின் கதையாகும். இதற்கு முன்னால் தப்பு செய்தது மகனாகவே இருந்தாலும் தந்தை தண்டிக்கும் படங்கள் வந்திருக்கும். ஆனால் மகனால் சமூகத்திற்கு இழுக்கு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை என்ற கான்செப்ட் ரசிகர்களை கவர்ந்திருந்தது. 




  • எம்டன் மகன் 






இந்தப் படத்துக்கு பிறகு பல குடும்பங்களில் கண்டிப்பு மிக்க தந்தையை ‘எம்டன்’ என்று தான் அழைக்கிறார்கள். மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த திருமுருகனின் முதல் வெள்ளித்திரை படைப்பு. அப்பா - மகனின் பாசத்தை நாசர் - பரத் வழியே அழகாக காட்டியிருப்பார். தந்தையின் கண்டிப்புக்கு பின்னால் கரிசனம் இருக்கும் என்பதை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருந்தது இந்த படம். 



  • கிரீடம்  




இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய முதல்கிரீடம் படம் அப்பா-மகன் உறவை  இன்னுமொரு நண்பனாய் காட்டியது. அஜித், ராஜ்கிரண், த்ரிஷா, சரண்யா, விவேக் என பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். நேர்மையான தலைமைக் காவலரான ராஜ்கிரண் தன் மகனான அஜீத்தை  காவல்துறை அதிகாரியாக மாற்ற வேண்டுமென்ற கனவுகளோடு இப்படத்தின் கதை நகரும். யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ராஜ்கிரண் கவர்ந்திருப்பார். குறிப்பாக ‘கனவெல்லாம் பலிக்குதே’  பாடல் தந்தை - மகனுக்குமான உறவை அழகாக காட்டியிருந்தது. 




  • சந்தோஷ் சுப்பிரமணியம் 






தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவை மிகவும் அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்டிய படங்களில் ஒன்று ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’. தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை இருக்கும் தந்தை, அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதில் தந்தை மகனாக பிரகாஷ் ராஜ் - ஜெயம் ரவி இருவரும் நடித்திருந்தனர்.  




  • வாரணம் ஆயிரம் 






படத்தின் தொடக்கமே தந்தையின் மரணத்தில் இருந்து தான் தொடங்கும். ராணுவத்தில் இருக்கும் மகன் ஊருக்கு வருவதற்குள் தன் தந்தை தனக்கு எப்படிப்பட்ட அப்பாவாக, நண்பனாக, குருவாக இருந்தார் என்பதை நினைத்துப் பார்ப்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும். தந்தை மற்றும் மகன் கேரக்டரில் சூர்யாவே நடித்திருந்தார். இப்படி ஒரு அப்பா நமக்கு இல்லையே என நினைக்கும் அளவுக்கு அப்பா சூர்யா பாராட்டுகளை பெற்றார். 




  • கேடி பில்லா கில்லாடி ரங்கா






அப்பாவை மகன்  கொண்டாடிய படங்களில் இப்படமும் ஒன்று. எதார்த்த வாழ்வில் என்னதான் எதிரும் புதிருமாக இருந்தாலும் மகனை நல்வழிப்படுத்த தந்தை எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள் என்பதை உணர்வுகள் ததும்ப இப்படம் விளக்கியிருந்தது. மேலும் பொதுவாக ஒரு இழப்பை சந்திக்கும் போது தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்பதை அழகாக சொல்லியிருந்தது. இதில் டெல்லி கணேஷ் - விமல், மனோஜ் குமார் - சிவகார்த்திகேயன் ஆகியோர் தந்தை - மகனாக நடித்திருந்தனர். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற வரிகள் இன்று பலருக்கும் அப்பாவின் அன்பை பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.




  • அப்பா






2016 ஆம் ஆண்டில் சமுத்திரகனி இயக்கி, நடித்த படம் ‘அப்பா’ . இந்தப் படம் குழந்த வளர்ப்பு குறித்து பேசப்பட்டிருந்தது. தன் மகனை அவன் ஆசைப்பட்டபடி வளர்க்கும் தந்தை (சமுத்திரகனி), தன் கனவுகளை மகன் மீது சுமக்கும் தந்தை (தம்பி ராமையா), தன் மகனை பற்றி அறியாமல் இருக்கும் தந்தை (நமோ நாராயணன்) என மூன்று விதமான அப்பாக்களை பற்றி கதை அமைக்கப்பட்டிருந்தது. குழந்தையை வளர்க்கும் முறை, இளம் வயதில் ஏற்படும் இன கவர்ச்சி உள்ளிட்டவற்றை வெளிப்படையாக இப்படம் பேசியது. 




  • அசுரன்




 




தந்தை - மகனுக்குமான உறவை அனைவரும் பாராட்டும்படி சொன்ன படங்களில் ஒன்று ‘அசுரன்’ . ஒரு மகனை பறிகொடுத்து, இன்னொரு மகனை காப்பாற்றப் போராடும் தந்தையின் (தனுஷ்) நடிப்பு ரசிகர்களை கண்கலங்க வைத்தது. எதற்கும் பழிக்குப்பழி தீர்வல்ல., கல்வி தான் முக்கியம்.. படித்து பெரிய இடத்துக்கு போன பிறகு நமக்கு ஏற்பட்டதை பிறருக்கு செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி ரசிகர்களின் மனதில் சிவசாமியாக தனுஷ் மிளிர்ந்தார்.