Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்?
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “சென்னையில் கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுக்கிறார்” என குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்ப்பமான நிலையில் திருமணம்?
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கான்வே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான், அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. யாரும் எதிர்பாராத விதமாக, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஹாய் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே நாங்கள் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட ஜாய்
தொடர்ந்து தனது நிறைமாத கர்பத்தை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றது, தனது குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டி இருக்கிறேன் என்பது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார். மேலும், ரங்கராஜ் உடன் பல்வேறு நேரங்களில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். அதேநேரத்தில், இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்த ரங்கராஜ், தனது மனைவி ஸ்ருதியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாக பேசுபொருளாகின. இந்நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, காவல்துறையில் ஜாய் கிரிசில்டா புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாய் - ரங்கராஜ் இடையே மோதல்?
ஸ்ருதி உடனான திருமண உறவை தாண்டியே, ஜாயை காதலித்து ரங்கராஜ் திருமணம் செய்துள்ளார். இது ரகசியமாகவே இருந்த நிலையில் தான், இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே ஜாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரங்கராஜ் தரப்பு அதிருப்தி அடைய, அதன் உச்சபட்சமாகவே ஜாய் காவல்துறையை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்
உணவுத்துறையை சேர்ந்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரங்கராஜும், பிரபலமான சமையல் கலை நிபுணராக அறியப்படுகிறார். அதையும் தாண்டி மெஹந்தி சர்கஸ் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் பயணத்தை தொடங்கினார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் வெகுஜன மக்களிடையே மிகவும் பிரபலமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் உருவெடுத்துள்ளார். இதுபோக, தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், மாதம்பட்டி ரங்கராஜின் உணவு வகைகள் தான் விருந்தினரை ஆச்சரியமைடய செய்கிறது.