தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த கனகாவுடைய தற்போதைய தோற்றம் என்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் காலக்கட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் தேவிகா. இவரின் மகள் கனகா பாடகியாக வேண்டும் என்கிற கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் காலம் அவரை நடிகையாக அடையாளப்படுத்தியது. 


1989 ஆம் ஆண்டு இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் கனகா. அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைக்கு திரைத்துறையில் இல்லா விட்டாலும் கனகா என்றாலே கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர் தானே என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தார். 


இதனைத் தொடர்ந்து தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள கனகா, ரஜினிகாந்த், ராமராஜன், பிரபு, சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்தார். கடைசியாக 1999 ஆம் ஆண்டு தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்க தொடங்கிய கனகா, ஒரு கட்டத்தில் காணாமலேயே போனார். அவர் உயிரிழந்து விட்டதாக 2, 3 முறை தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 






ஆனால் தான் உயிருடன் இருப்பதாக கனகா தெரிவித்திருந்தார். மேலும் பல வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாத இல்லத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் திரையில் இருந்து விலக காதல் தோல்வி, மன அழுத்தம், தந்தையுடனான சொத்து பிரச்சினை என பல காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. கனகாவை இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர். அதேபோல் தேவிகா மகளுக்கா இப்படி ஒரு நிலைமை என வருத்தத்தை தெரிவிக்கும் வகையிலான ரசிகர்களைப் பெற்றிருந்தார் கனகா. 


இப்படியான நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி, நடிகை கனகாவை பல வருடங்களுக்குப் பின் சந்தித்ததாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு காரணம், சினிமாவில் தனது கண் அழகால் கலக்கிய கனகா, காணாமல் போன சமயத்தில் உடல் மெலிந்து காணப்பட்டிருந்தார். இப்படியான நிலையில் தற்போது உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத மாதிரி காணப்படுவது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


உண்மையிலேயே இது கனகாவா என பலரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் இப்படி மாறிப்போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி நடிகை குட்டி பத்மினி பதில் சொன்னால் தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும்.