31 Years of Annamalai: தமிழ் சினிமாவின் விஜய் தொடங்கி பல ஹீரோவுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


முத்திரை பதித்த முதல் கூட்டணி 


90களின் காலக்கட்டத்தில் ரஜினியின் ஒவ்வொரு படங்களும் அவரின் ஸ்டைலையும், நடிப்பையும் வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா தொழிலை நம்பியிருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நடிப்பின் திறமையை வெளிப்படுத்தும் சில படங்களில் நடித்த ரஜினி கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்தார். அவரை ‘கமர்ஷியல் கிங்’ ஆக மாற்றிய படம் தான் ‘அண்ணாமலை’. இந்த படம் 1992 ஆம் ஆண்டு தான் வெளியானது. 


அண்ணாமலை படத்தின் மூலம் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி முதல்முறையாக இணைந்தார். கே.பாலசந்தர் தயாரித்த இந்த படத்தில் குஷ்பூ, மனோரமா, மறைந்த நடிகர் சரத்பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி என பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் ரஜினி ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. 


படத்தின் கதை 


பால்காரனாக வரும் ரஜினியும், பணக்கார வீட்டு பையனான சரத்பாபுவும் சிறு வயது நண்பர்கள். நகரின் நடுவே இருக்கும் ரஜினியின் இடத்தை ஏமாற்றி சரத்பாபுவின் அப்பா ராதாரவி பெற்றுக்கொள்வார். அதற்காக நியாயம் கேட்கப்போன இடத்தில் சரத்பாபு அவமானப்படுத்தப்படுவார். இதனால் நட்பு துரோகமாக மாறும். ரஜினி வீட்டை இடித்து அவரை சரத்பாபு நடுத்தெருவுக்கு கொண்டு வருவார். இதற்கு ரஜினி எடுக்கும் பழிக்குப்பழியே இப்படத்தின் கதையாகும். 


அடிப்படையில் பார்த்தால் சாதாரண டெம்பிளேட் கதை தான். ஆனால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எங்கேயும் சலிப்பு தட்டாமல் இருக்கும் அளவுக்கு சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் அண்ணாமலையை மலையளவு உயர்த்தியது. 


போட்டிப் போட்டு நடித்த பிரபலங்கள் 


இந்த படத்தில் யார் நடிப்பு சூப்பர் என சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்திருப்பார்கள்.ஒரு பக்கவான கமர்ஷியல் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியான அளவில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தில் பல இடங்களில் அரசியல் பேச்சு பேசியிருப்பார் ரஜினி. அண்ணாமலையில் முதல் பாதியில் இடுப்பில் துண்டு, கையில் பால் கேன் என எளிமையான பால்காரனாகவும், இரண்டாம் பாதியில் கோட், சூட் என அசத்தலான பிசினஸ்மேனாகவும் மிரட்டியிருப்பார். 


குறிப்பாக தொடையை தட்டி சபதம் எடுக்கும் காட்சிகள் நடிகர் விஜய் தொடங்கி தமிழ் சினிமாவில் ஹீரோவாக நினைத்த பலரும் இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. அந்த வசனங்கள் இன்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 


தேவாவின் தேனிசை பாடல்கள் 


படத்தின் பாடல்களை விட ரஜினிக்கு தேவா போட்ட தீம் மியூசிக் 31 ஆண்டுகளை கடந்தும் இன்றைக்கும் ரஜினி நடிக்கும் படங்களில் அவரது பெயர் வரும் போது டைட்டில் மியூசிக் ஆக பயன்படுத்தப்படுகிறது.அதேபோல் வந்தேண்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம் என வைரமுத்து வரிகளில் அற்புதமான பாடல்களை தேவா கொடுத்திருந்தார். 


திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டது. தொடர்ச்சியான ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் கலெக்‌ஷன் அள்ளியது. 31 ஆண்டுகள் கடந்தும் இன்று அண்ணாமலை படம் பலராலும் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால் இந்த அண்ணாமலையை மலையளவு அல்ல...கடுகளவு கூட யாராலும் நெருங்க முடியாது என்பதே உண்மை...!