தன்னை காரில் பின்தொடர்ந்த இளம் பெண்ணுக்கு நடிகை மஞ்சு வாரியர் பதிலளித்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 


பிரபலங்களுடனான சந்திப்பு 


பொதுவாக பிரபலங்களை எங்கு கண்டாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அவர்களுடன் உரையாட, புகைப்படம் எடுக்க முயற்சிப்பார்கள். இதில் சில பிரபலங்கள் மக்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். சிலரோ தங்களுக்கு அசௌகரியமான நிலையை உணர்ந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறியோ, அல்லது ரசிகர்களிடம் அன்பாகவோ, கோபமாகவோ உணர்த்தி விட்டோ அங்கிருந்து செல்வார்கள். 


அப்படித் தான் சமீபத்தில் குல தெய்வ கோயிலுக்கு சென்றிருந்த நடிகை நயன்தாராவை ரசிகர்கள் சுற்றி வளைத்து போட்டோ எடுக்க முற்பட்டனர். அப்போது சிலர் தொட்டதால் அவர் டென்ஷனானார். இதனைத் தொடர்ந்து சாமி கும்பிட விடாமல் போட்டோ எடுக்க முயன்றவர்களிடம் கோபப்பட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆனால் நயனுக்கு அசௌகரியமான நிலை ஏற்பட்டதால் தான் இத்தகைய செயல்களை கண்டித்தார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சப்போர்ட் செய்தனர். 


மஞ்சு வாரியர் செய்த சிறப்பான சம்பவம் 


தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மோகரவம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமான மஞ்சு வாரியர், 1995 ஆம் ஆண்டு வெளியான சாக்ஷ்யம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சல்லாபம்  திரைப்படத்தில் நடித்த போது உடன் நடித்த நடிகர் திலீப்பை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 


கிட்டதட்ட 17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதற்கிடையில்   தீலிப் உடன் மஞ்சு வாரியருக்கு  விவாகரத்தும் ஏற்பட்டது. மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய மஞ்சு வாரியர் மலையாள திரையுலகின் ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். 


இவர்  கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான  அசுரன்  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் மஞ்சு வாரியர் நடித்தார். இதனிடையே இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஈரூரில் நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொண்டு காரில் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். 


அப்போது மஞ்சு செல்வதை இளம்பெண் ஒருவர் அடையாளம் கண்டுக் கொண்டு, காரை துரத்தி சென்றார். பெண் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வருவதை கண்ட மஞ்சுவாரியர் காரை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளார். அதற்கு, “இன்று தனது தாயின் பிறந்தநாள். அவர் உங்களது  தீவிர ரசிகை என்பதால்  நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என  கூறியுள்ளார். 


இதனையடுத்து மஞ்சு வாரியர் தனது உதவியாளரிடம் அப்பெண்ணின் எண்ணை வாங்கியதோடு, அவரது தாயிடம் பேசுவதாகவும் உறுதியளித்தார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.