Manoj Bharathiraja: மனோஜ் கடைசியா பேசிய விஐபி யார்? உதவி கேட்டாரா? பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

மனோஜ் கேட்கும் போதே அவருக்கு உதவி செய்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது சடலத்தைக் கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

Continues below advertisement

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மார்ச் 26-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. மனோஜை பற்றி பலரும், மிகவும் எளிமையான எதார்த்தமான மனிதர். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காதவர் என புகழ்ந்து பேசி இருந்தனர்.

Continues below advertisement

இந்த நிலையில் தான் மனோஜ் பாரதிராஜா குறித்து, மூத்த பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தனது தந்தையைப் போன்று சினிமாவில் தன்னால் சாதிக்க முடியவில்லை என்ற அழுத்தம் தான் அவரை வெகுவாக பாதித்தது.
பெரிய பட்ஜெட்டில் தாஜ்மஹால் படம் எடுக்கப்பட்டது. அந்தப் படம் ஹிட் கொடுத்தாலும் தனது மகனை பெரியளவில் ஹீரோவாக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஒரு புறம் இருந்தது. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ஷங்கரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி அவரால் இயக்குநராகவும் ஜெயிக்க முடியவில்லை.

 

சிவப்பு ரோஜாக்கள் 2 படம் எடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் படத்திற்கு பூஜை மட்டும் போடப்பட்டது. அதன் பிறகு படம் எடுக்கப்படவில்லை. சொத்துக்கள் இருந்த போதிலும் அவரிடம் போதுமான பணம் இல்லை. பாரதிராஜா கொடுக்கும் பணம்தான் அவருக்கு உதவியாக இருந்தது. அவரிடம் இருந்தது என்னவோ கதைகள் மட்டும் தான். இதற்காக பல நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அணுகியிருக்கிறார்.

அப்போது யாரும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இன்று அவருக்காக அஞ்சலி செலுத்த வரும் அவர்கள்  கண்ணீர் வடிக்கிறார்கள். ஒருவர் கேட்கும் உதவிக்கு அப்போதே அவரை கைதூக்கிவிட வேண்டும். அப்போது தான் உதவி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். மனோஜ் கேட்கும் போதே யாரேனும் ஒருவர் அவருக்கு உதவி செய்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது. பாரதிராஜாவுக்கும், மனோஜிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், தான் இருவரும் வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் தான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு கூட அவரிடம் போதுமான பணம் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது கூட மனோஜ் தனது வலியையும், வேதனையும் ஒரு விஐபியிடம் பேசியிருக்கிறார். அவரோ பாரதிராஜாவிடம் பேசுவதாக சொல்லிருக்கிறார்.

அப்படி அவர் பேசி முடித்த கொஞ்ச நேரத்திலேயே மனோஜ் உயிரிழந்துவிட்டார். தனது வேலையில் மட்டுமே கவனமாக இருக்க கூடியவர். அவர் எந்த சர்ச்சையிலும் இதுவரையில் சிக்கவில்லை. அவர் உதவி கேட்டு வந்த போதே யாரேனும் அவருக்கு உதவி செய்திருந்தால் இன்று அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola