தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் மிஷ்கின் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரைமொழி வழியே அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் மிஷ்கினின் இயற்பெயர் சண்முகராஜா. இவர் 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தார். ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் தி இடியட் நாவலின் கதாநாயகனான இளவரசர் மிஷ்கினின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு அதன் பெயரை தனது பெயராக மாற்றிக் கொண்டார். ஒரு தீவிர புத்தக வாசிப்பாளரான மிஷ்கின் முதலில் இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
கிட்டதட்ட 8 மாதங்கள் இருந்த அவரின் திரையுலக பயணம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் விஜய் நடித்த யூத் படம் மூலம் தான் தொடங்கியது. அந்த படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் மிஷ்கின், அதில் இடம்பெற்ற பிரபல பாடலான “ஆல் தோட்ட பூபதி” உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தவர். 2006 ஆம் ஆண்டு காதல் தினத்தை முன்னிட்டு வெளியானது சித்திரம் பேசுதடி. நரேன், பாவனா என மிஷ்கின் உட்பட எல்லோருமே புதுமுகங்கள். அடிதடி கதையா? என நினைத்தால் அறத்தை போதித்தார். இதில் இடம்பெற்ற “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்” பாடல் படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணமாக அமைந்தது.
இரண்டாவது படைப்பான அஞ்சாதேயில் நண்பர்கள் எதிரிகளான நிலையில்,இறுதியில் வழக்கம்போல அன்பை தூவியிருப்பார். தாலாட்டு கேட்காதவர்களின் குரலாக ஒலித்த “நந்தலாலா”, காமத்தை வேடிக்கையாக்கிய கும்பலுக்கு எதிராக ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் செய்யும் எதிர்பாரா முடிவுகளாக “யுத்தம் செய்”, இருள் சூழ்ந்த சினிமாவில் மெழுவர்த்தி ஏற்றிக் கதை சொன்ன “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, நல்ல பேயிடம் எதிரொலிக்கும் காதலை “பிசாசு” படத்திலும், துப்பறியும் நபரின் கதையான ஷெர்லாக் ஹோம்ஸை “துப்பறிவாளன்” ஆகவும், உளவியல் த்ரில்லாராக வெளியான ”சைக்கோ” என ஒவ்வொன்றும் மிஷ்கினின் அடையாளங்கள்.
இரவு காட்சிகள், மஞ்சள் சேலை அணிந்த பெண்ணின் குத்துபாட்டு இவைதான் மிஷ்கினின் படம் என சொல்லப்பட்ட சினிமாவில் அவர் சொல்லாமல் சொல்லியவை ஏராளம். மனிதனின் உளவியலில் ஆராய்ச்சி செய்வதென்பது மிஷ்கினுக்கு கைவந்த கலை. பார்ப்பதற்கு “க்ரின்ஞ்” மாதிரி தோன்றும் அவரின் படங்களில் அன்பு ஒன்று பிரதானமாக உள்ளது.அதுவே அனைவராலும் மிஷ்கின் கொண்டாடப்பட காரணமாக அமைந்துள்ளது.
இயக்குநர் மட்டுமா நடிகராக சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் அசத்தலான திறமையை வெளிப்படுத்திய மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாடகராக அஞ்சாதே, திண்டுக்கல் சாரதி, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். இதில் சில படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
அன்பும், கோபமும் கொண்ட புனைவுகளில் மட்டுமே காணப்படும் கலைஞனின் ஆளுமை கொண்ட இயக்குநர் மிஷ்கினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!