மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடைசியாக தனக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த வாணி ஜெயராம் இன்று நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 78 வயதான அவருக்கு அண்மையில் மத்திய அரசின் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 


வேலூரில் கலைவாணி என்ற இயற்பெயரோடு பிறந்த வாணி ஜெயராமின் குடும்பம் இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்கது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை  பயின்ற வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரின் பாடல்களைக் கேட்டு  திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.


பின்னர்  சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த அவரது கணவர் ஜெயராம், வாணி உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தார். 






1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான அவர், தமிழில் தாயும் சேயும் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். ஆனால் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். 


Vani Jayaram Songs: ’மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என தொடங்கிய குரல்... வாணி ஜெயராம் டாப் 5 பாடல்கள்!


இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதுக்கான பட்டியலில் வாணி ஜெயராம் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக வாணி ஜெயராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தீர்க்க சுமங்கலி படத்தில் இடம் பெற்ற “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலை பாடியிருந்தார். மேலும்  “இந்த வருடம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது மிக மிக சந்தோஷம் அடைந்தேன்.


52 வருடங்களாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கு என்னுடைய பாடல்களை கேட்டு ரசித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த விருதை அளித்து என்னை கௌரவப்படுத்திய மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியையும் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார். இதுதான் வாணி ஜெயராம் கடைசியாக பொதுவெளியில் பேசி வெளியிட்ட வீடியோவாகும்.