தமிழ் சினிமாவில் ஏராளமான பாடலுக்கு கிடார் வாசித்த ஆர். சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு சோகமான ஒன்றாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து மரணிப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களிடையே தாங்க முடியாத துயரை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல கிடாரிஸ்ட் ஆக வலம் வந்த ஆர். சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற “இளையநிலா பொழிகிறதே” பாடலில் கிடார் இசை வாசித்து புகழ்பெற்றவர் சந்திரசேகர். இவர் இளையராஜாவுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக சந்திரசேகர் பணியாற்றியுள்ளார். இவருடன் இவரின் தம்பியும், 2020 ஆம் ஆண்டு மறைந்த பிரபல டிரம்மர் இசைக்கலைஞருமான புருஷோத்தமனும் பணியாற்றி வந்தார். 


இருவரும் இளையராஜாவின் இசைத் தளபதிகளாக திகழ்ந்தனர். சந்திரசேகர் மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற “வசந்தகால நதிகளிலே” பாடலில் மவுத் ஆர்கன் வாசித்ததும் இவர்தான். 1995 ஆம் ஆண்டு முதல் 2000 பல விளம்பர படங்களுக்கு பணியாற்றியிருந்தார்.தமிழ் மட்டுமல்ல சந்திரசேகர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றினார். 


இதுதொடர்பாக இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு கிட்டார் வாசித்த R.சந்திரசேகர் மறைந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் 'வசந்தகால நதிகளிலே' என்ற பாடலுக்கு மவுத் ஆர்கன் வாசித்ததும் இவரே. அதே போன்று டி ராஜேந்தர் படங்களுக்கு பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தவரும் இவரே.


இசையமைப்பாளர் ஆர்.சந்திரசேகர் என்னுடைய விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் மற்றும் மருமகள் மகாலட்சுமி ஆகியோரும் இசைக்கலைஞர்களே. எல்லோரும் என்னுடைய விளம்பர படத்தில் பணியாற்றியுள்ளார்கள். 1995-2000 வரை என்னுடைய விளம்பர படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்கள்.அதன் பிறகு நான் உலக சினிமாவிற்கு வந்த பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது.


கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து அசோக் பில்லர் போகும் வழியில் காம்தார் நகரில் அவரது இல்லம் உள்ளது.எத்தனையோ முறை அவரது இல்லம் தேடி இசையை வாங்கப் போய் இருக்கிறேன்.  இன்றும் வருகிறேன் சந்திரசேகரன் சார்.அன்று ஒரு நாள் எனக்காக வாசித்த இளையநிலாவை கிட்டார் இசைக்கருவியில் இன்றும் வாசிப்பீர்களா” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.