தன்னை ஒரு நடிகர் அவரது மகளின் செருப்புடன் ஒப்பிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை அர்ச்சனா கவுதம் (Archana Gautam) தெரிவித்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. 


கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பிகினி போட்டியில் மிஸ் பிகினி இந்தியா என்ற பட்டம் பெற்றவர் அர்ச்சனா கௌதம். இவர் ஒரு மாடலாக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா கௌதம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவர் படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மும்பையில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள மாயநகரியில் 2 பெட்ரூம்கள் கொண்ட வீடு ஒன்றை அர்ச்சனா வாங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையின் மிகவும் கடினமான நிகழ்வுகளை பற்றி பேசியுள்ளார். அதாவது, “எனது தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. ஆனால் அவரின் பணிகாலத்தில் சொந்த வீடு கட்டுவதற்கான போதுமான பணம் சம்பாதிக்க முடியவில்லை. மேலும்  மீரட்டிலோ அல்லது மும்பையிலோ எங்களுக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. கிராமத்தில் ஒரு சிறிய நிலம் இருந்த நிலையில் அதனையும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பறித்துக்கொண்டார்கள். பல வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி அந்த நிலத்தை மீட்டோம். 


தற்போது தற்போது எனது தாயின் நகைகளை அடமானம் வைத்து இந்த வீட்டை வாங்கியுள்ளேன். மும்பைக்கு வந்ததில் இருந்து 7-8 வீடுகள் மாறிவிட்டேன். இப்போது அந்த பிரச்சினை இல்லை. எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால் அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு விரைவில் தாயின் நகைகளை மீட்பேன்” எனவும் அர்ச்சனா கௌதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். 


அதாவது, “சினிமாவில் நடிக்க தொடங்கிய நேரத்தில்,  ஒரு பெரிய நட்சத்திரத்தை சந்தித்தேன். அவரது மகளும் ஒரு பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் தான். நான் அந்த நடிகரிடம், 'சார், நான் உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் தீவிர ரசிகை, எதிர்காலத்தில் உங்கள் மகள் போல் இருக்க விரும்புகிறேன்' என்று கூறினேன். இதைக் கேட்ட அந்த நடிகர், என்னைப் பார்த்து   'நீ என் மகளின் காலணிகளுக்கு சமம். அவரைப் போல எல்லாம் வர முடியாது' என்று கூறினார். அவருடைய வார்த்தைகளால் நான் மனம் மிகவும் வருந்தினேன். இந்த அவமானத்தை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. 


ஆனால் ஒன்றை மட்டும் நினைத்துக் கொண்டேன். எனது சாதனையை காண அந்த நடிகர் உயிருடன் இருக்க வேண்டும் என்று அன்று முதல் வேண்டிக் கொண்டிருந்தேன். இறுதியாக எனது ஆசை நிறைவேறி விட்டது.  எனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் மும்பையில் வீடு வாங்கியுள்ளேன். சினிமாவில் நல்ல நிலைக்கு முன்னேறி கொண்டிருக்கிறேன்” என அர்ச்சனா கௌதம் கூறியுள்ளார். ஆனால் தன்னை அவமானப்படுத்திய நடிகர் யார் என்ற விவரத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அர்ச்சனாவுக்கு ஆதரவாக #WeStandWithArchana என்ற ஹேஸ்டேக் பிரபலமாகியுள்ளது.