பெற்றோர்களை மீறி பாசிட்டிவ் வழியில் முன்னேறும் இளைஞர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவார்கள் என நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். 


தமிழில் இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து நடிகராகவும் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்ட அவர் இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் மிகப்பிரபலம். அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியல். அந்த சீரியலில் “குணசேகரன்” என்ற கேரக்டரில் மாரிமுத்து அசத்தலான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். 


தொடர்ந்து அவருக்கு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது. அதேசமயம் இயக்குநர் மாரிமுத்து என்ற பெயர் மறைந்து இப்போது எங்கு பார்த்தாலும் ஆதி குணசேகரன் என்ற பெயர் தான் அனைவரது மனதிலும் ஒட்டிக் கொண்டுள்ளது.  இப்படியான நிலையில் அவர் தங்களுடைய மகன், மகள் விருப்பம் பற்றியும், இளைஞர்களுக்கு அறிவுரை பற்றியும் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நாங்கள் எங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டோம். அவங்க விரும்புற படிப்பை படிச்சாங்க. இப்ப கூட நாங்க கல்யாணம் பண்ண பொண்ணை அழைத்து வந்தாலும் சரி என மகனிடம் சொல்லியுள்ளோம். அதேபோல் மகளிடம் யாரையாவது லவ் பண்ணுனா சொல்லுமா என கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அவர் அப்படியெல்லாம் யாருமே இல்லை என கூறுவார். ஈசியான விஷயம் அது. புடிச்ச பொண்ணு, பையன் கூடவே அவங்களை வாழ வச்சிரலாம் இல்லையா என மாரிமுத்து கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்களுக்கு நான் சொல்ற அட்வைஸ் என்னனா, அப்பா, அம்மா பேச்சை கேக்காதீங்க. கேட்டா நீங்க அப்பா, அம்மா இடத்துல தான் இருப்பீங்க. அதைவிட உயரத்துக்குப் போக மாட்டாங்க. மீறியவர்கள் பாசிட்டிவ் ரூட்ல போகணும். அதாவது படிக்கிறது, ஐடி கம்பெனியில் வேலைக்கு போறது என அப்படி போகணும். அதை விட்டு ஒயின் ஷாப் பக்கம் போயிட கூடாது. அப்படி பாசிட்டிவ் வழியில போறவன் முன்னேறிடுவான். அதை விட்டு விட்டு, லவ் பண்றேன்னு ஊரை சுத்துறது அப்படி இப்படின்னு நேரத்தை வீணாக்க கூடாது. அதுக்கு காதல் பண்றது தப்புன்னு சொல்லல. 


என் பிள்ளைங்க லவ் பண்றாங்களான்னு தான் கேட்கிறேன். ஒருவேளை அவர்களுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் வேறு சாதியில் தான் வரன் தேடுவேன். காரணம் நான் சாதி பார்க்க மாட்டேன். சாமி கும்பிட மாட்டேன். கோயிலுக்கு போக மாட்டேன். என்னுடைய பழக்க வழக்கம் வித்தியாசமானது. அதனால் பொண்ணும், பையனும் யாரை காதலிக்கிறேன் என சொன்னால் அடுத்த நாளே திருமணம் செய்து வைப்பேன்.