என்ஜாயி என்சாமி:


பூர்வகுடி மக்களின் நில அரசியலை வெளிப்படையாக பேசிய பாடல்தான் ”என்ஜாயி என்சாமி” . இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது மகள் தீ மற்றும் பாடலாசிரியர் , பாடகர் என பன்முக திறமை கொண்ட தேன்குரல் அறிவு பாடியிருந்தனர். இந்த பாடல் அறிவு எழுத்தில் உருவான பாடல் . இதில் சிறப்பு என்னவென்றால் பாடல் மெட்டமைப்பதற்கு முன்னதாகவே இதன் வரிகளை இதே பாணியில் உருவாக வேண்டும் என எழுதியவர் அறிவுதான். ஆனால் அவருக்கான அங்கீகாரம் ஒவ்வொரு முறையும் மறுக்கப்பட்டு வந்தது.  இதற்கு அறிவின் ரசிகர்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.







ஒலிம்பியாடில் புறக்கணிக்கப்பட்ட அறிவு :


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் அரங்கேற்றப்பட்டது. அதில், அறிவின் ”என்ஜாயி என்சாமி” பாடலை தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர்கள். ஆனால் அறிவு இதில் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அறிவு ஒரு பதிவினை ஷேர் செய்திருந்தார். அதில் தனது வலிகளை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். குறிப்பாக “நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களிடம் உள்ள பொக்கிஷத்தை யார் வேண்டுமாலும் தட்டிப் பறிக்கலாம்,. ஆனால், விழித்திருக்கும்போது, உங்களிடமிருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. ஜெய் பீம்!” என்ற வரிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளானது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தீ இருவருமே விளக்கமளித்து அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டனர். அதில் “ அறிவு அமெரிக்காவில் இருந்ததால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை “ என குறிப்பிட்டிருந்தனர்.







பா.ரஞ்சித் கருத்து :



இந்த சர்ச்சை தொடர்பாக அறிவுக்கு நெருக்கமானவரும் , இயக்குநருமான பா.ரஞ்சித் மனம் திறந்திருக்கிறார். இது குறித்து பேசிய பா.ரஞ்சித் ”அந்த பாடல் மூலமா அறிவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை கிட்ட இருந்து பார்த்திருக்கிறேன். எல்லோருக்குமே பிரச்சனைகள் வரும் ,அந்த பிரச்சினையை தீர்த்துக்கிட்டு சரியான முறையில் அடுத்தக்கட்டத்திற்கு நகர வேண்டும். இதுதான் நான் அறிவுக்கிட்ட கேட்கும் விஷயம். அறிவுடைய இந்த வெடிப்பு என்பது இத்தனை நாட்களுடடைய மன உளைச்சல்தான். அவன் நிறைய அனுபவிச்சிருக்கான் . இதுக்கு பின்னால நிறைய விஷயங்கள் இருக்கு. அது அறிவு பேசினாதான் சரியா இருக்கும்” என்றார்.