சென்னையில் உள்ள பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷனில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் தமிழ் சினிமாவில் லைகா நிறுவனம் படத்தயாரிப்பில் களமிறங்கியது. இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்கரனின் நிறுவனம் என்பதால் முதல் படத்திலேயே பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் கத்தி படம் வெளியானபோது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இல்லாமலேயே அப்படம் வெளியானது. தொடந்து பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் பட விநியோகம் செய்வதிலும் முழுவீச்சில் இயங்கி வருகிறது. 


இந்நிலையில் சென்னை தி.நகர் மற்றும் அடையாறில் உள்ள லைகா தொடர்புடைய நிறுவனங்களில் சட்டவிரோதமானமான பணப்பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக சுபாஸ்கரனும்,  தலைமை நிர்வாக அதிகாரியாக  ஜி.கே.எம்.தமிழ்குமரனும் உள்ளனர். 


கடைசியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த “பொன்னியின் செல்வன்” படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதுவரை இந்த பாகம் ரூ.350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினி நடிக்கும் லால் சலாம், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவற்றை லைகா தயாரிக்கிறது. இதேபோல் அஜித்தின் 62வது படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.