பிரபல நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “ “ எனக்கு லேசானா அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் என்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மற்றபடி ஒன்றுமில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, சோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிந்து, பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.






பிரபல நடிகர் துல்கர் சல்மான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன். இளம் வயதில் கொச்சியில் பள்ளிப்படிப்பை தொடங்கிய இவர், சென்னையிலும் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். அதன் பிறகு அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர் அங்கேயே ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.  அதன் பிறகு தந்தையை போலவே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் மும்பையில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் தனது பயிற்சியை முடித்தார். 2012ம் ஆண்டு ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கிய செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் இவர் மலையாள உலகில் ஹீரோவாக அறிமுகமானார். 


முதல் படத்திலேயே நேர்த்தியான தனது நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு 2014ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை முடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.  தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான் 'வரனே அவசியமுண்டு' என்ற தனது படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகும் மாறினார்.


தொடர்ந்து தமிழில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான குரூப் படமும் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இதனையடுத்து பிரபல நடன இயக்குநர் பிருந்தா  இயக்குநராக களமிறங்கும் ஹே சினாமிக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்தப் பாடலின் ரிகர்சல் வீடியோவை துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.