இந்தியில் வெளியாகியுள்ள த்ரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலரும் நடித்த த்ரிஷ்யம் படம் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தன் மகளை காப்பாற்ற தாய் நிகழ்த்தும் ஒரு கொலையை, குடும்பமே சேர்ந்து மறைந்து போலீஸ் விசாரணையில் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார்கள். 






இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் நடிப்பில் இப்படம் உருவானது. பாபநாசம் என்ற பெயரில் வெளியான படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் த்ரிஷ்யம் படம் வெளியாகியிருந்தது. 


இதற்கிடையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் த்ரிஷ்யம் படத்தின் 2 ஆம் பாகம் ஓடிடியில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் முதல் பாகத்தை விட பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனால் 3 ஆம் பாகமும் வெளிவரும் என ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார். 






இந்நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி இந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் த்ரிஷ்யம் 2 படம் வெளியானது. அபிஷேக் பதக் இயக்கியுள்ள இந்த படமும் பாலிவுட் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளதால் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் 18 ஆம் தேதி ரூ.15.38 கோடியும், 19 ஆம் தேதி ரூ.21.59 கோடியும், நேற்றைய தினம் ரூ.27.17 கோடியும் என மொத்தம் ரூ.64.14 கோடி வசூல் செய்துள்ளது. இதனை #Dhrishyam2 என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.