'சூர்யா 42’ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக திஷா பதானி கோவா விரைந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.


சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் பெயரிடப்படாத படம் ’சூர்யா 42’ இப்படத்தின் மோஷன் பிட்சர் முன்னதாக இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.


பாலிவுட் தொடங்கி பலரையும் தன் ஃபிட்னஸ்ஸால் கிறங்கடித்துவரும் பிரபல நடிகை திஷா பதானி, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். இது கோலிவுட் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.






இந்நிலையில் திஷா முன்னதாக 'சூர்யா 42’ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக கோவா விரைந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.


முன்னதாக மும்பையிலிருந்து அவர் கோவாவுக்கு பயணித்த நிலையில், பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் திஷாவின் கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்தது என்றும், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இந்தக் கதாபாத்திரத்தை திஷா ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.






மேலும் இப்படத்துக்காக கோவாவின் புறநகர் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட உள்ளதாகவும், 250 ஸ்டண்ட் கலைஞர்களுடன் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.






சிறுத்தை சிவா சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசப்பட்டுவந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மாதம் இத்தகவலை உறுதி செய்தனர். இப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் கைகோர்க்கிறார். கோவை சரளா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.