தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெற்றி மாறன். பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்துள்ளார்.


வாடிவாசல் எப்போது?


இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் வாடிவாசல். நீண்ட காலமாக படப்பிடிப்பிலே இந்த படம் இருந்து வரும் நிலையில், இந்த படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. வெற்றிமாறனும் விடுதலை 2ம் பாகம் என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் சூழலில், சூர்யாவும் கங்குவா உள்பட அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.


இதனால், வாடிவாசல் கைவிடப்பட்டதாகவே தகவல்கள் பரவி வரும் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம் வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய வெற்றி மாறன்,” ரொம்ப நாளா இதை சொல்லிட்டே இருக்கோம். இதோ வாடிவாசல் வருது. வாடிவாசல் வருதுனு. அன்னைக்கு கூட பாத்தேன். மோடிவாசல்னு கூட பேர் வைக்கலாம்னு வலைப்பேச்சுல பாத்தேன், ரொம்ப நாளா எடுத்துகிட்டே இருக்காங்க. சொல்லிகிட்டே இருக்காங்க. சீக்கிரம் ஸ்டார்ட் பண்றோம். விடுதலை முடியவும் ஆரம்பிக்கிறோம் என்றார். இதையடுத்து, பேசிய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் படம் உலகத் தமிழர்களுக்கு அங்கீகாரமாக அமையும் என்று கூறினார்.


சூர்யா ரசிகர்கள் உற்சாகம்:


ஜல்லிக்கட்டு கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் வாடிவாசல் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்காக, நடிகர் சூர்யா காளை மாட்டுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கடந்த 2021ம் ஆண்டே இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படம் தள்ளிப்போகியது.


இந்த நிலையில், வாடிவாசல் கைவிடப்பட்டதாக பலரும் கருதிய நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் வாடிவாசல் படம் மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விடுதலை 2ம் பாகம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.