அரண்மனை படத்தின் 2-ஆம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தன்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்தேன் என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் கமர்ஷியல் படம் எடுப்பதில் சிறந்தவர் சுந்தர் சி. 90-கள் காலகட்டத்தில் இருந்து படம் இயக்கி வரும் அவர், நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் 2014-ஆம் ஆண்டு வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம் ஆகியோரை கொண்டு அரண்மனை என்ற பேய் படத்தை எடுத்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டில் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.


இந்த படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா ஆகியோரோடு சுந்தர் சி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த படத்தில் நடந்த பிரச்னை ஒன்றை நேர்காணல் ஒன்றில் சுந்தர் சி தெரிவித்திருந்தார். 


அதாவது, “என் கேரியரில் நான் ரொம்ப பார்த்து பயந்த படம் என்றால் அது அரண்மனை 2-ஆம் பாகம் தான். படம் நாளைக்கு ரிலீஸ் என்றால் அதன் இறுதி வடிவத்தை முந்தைய நாள் இரவு 11.30 மணிக்கு குடும்பத்தோடு பார்க்கிறேன். படத்துல கிளைமேக்ஸ் பகுதி தான் ரொம்ப முக்கியமானது. ஆனால் அதைப் பார்த்ததும் என் இதயமே நின்றுபோனதுபோல இருந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக படத்தின் கிளைமேக்ஸ் சீனில் கலர் ரொம்ப ஏறிவிட்டது. அதன் லெவல் குறைந்து விட்டது. எந்த சினிமாவாக இருந்தாலும் அதன் ஜீவன் கிளைமேக்ஸ் காட்சியில்தான் உள்ளது.


அப்படியாக அரண்மனை 2-இல் அந்த காட்சியில் பச்சை மற்றும் சிவப்பு கலர் அதிகமாகி விட்டது. அச்சச்சோ படம் காலி என தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். நம்ம வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் எனக்கு வாழ்க்கை மாதிரி தான். ஒரு படம் ஓடவில்லை என்றால் அய்யய்யோ அடுத்து வாழ்க்கையில என்ன பண்ணப்போகிறோம் என நினைக்க வைத்துவிடும் என சுந்தர் சி தெரிவித்திருப்பார். 


அரண்மனை 4


கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை படத்தின் 3-ஆம் பாகம் ரிலீசானது. இப்படியான நிலையில் சுந்தர் சி. இயக்கியுள்ள அரண்மனை படத்தின் 4-ஆம் பாகம் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, யோகிபாபு, விடிவி கணேஷ் என பலரும் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.