தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சரண். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் உதவியாளராக இருந்து இயக்குநரானவர். 1998ஆம் ஆண்டு 'காதல் மன்னன்' திரைப்படம் மூலம் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு காதல் வந்தால் என்னவாகும் என்ற சவாலான ஒரு திரைக்கதையை ஜனரஞ்சகமாக சொல்லிய ஒரு திரைப்படம். அஜித்குமார் - சரண் கூட்டணியில் உருவான முதல் படமே மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அதே கூட்டணியில் அமர்க்களம், அட்டகாசம் என அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி பெற்றது. 

 

 

 


 

அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் - சரண் கூட்டணியில் வெளியான படம் 'அசல்'. அப்படத்தில் திரைக்கதை எழுதுவதில் அஜித்தின் பங்கும் இருந்தது என்பது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சரண் பேசி இருந்தார். அசல் படத்தை என்னுடைய படமாக பார்க்காமல், அஜித் நடித்த படமாக பார்க்காமல், எங்கள் இருவரின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்களை ஒப்பிட்டு அசல் படத்தைப் பார்க்காமல் சாதாரண படமாக பார்த்தால் தொடக்கம் முதல் இறுதிவரை ஏராளமான நுணுக்கங்களை கொண்ட மிகவும் நல்ல படமாக இருக்கும். 

 

ஒவ்வொரு படத்திலும் ஏகப்பட்ட  பஞ்ச் வசனங்களாகப் பேசி அலுத்துப் போன அஜித் “இந்தப் படத்தில் நான் பஞ்ச் டயலாக் பேசப்போவது இல்லை, எனக்கு பெரிய வசனமே இருக்கக் கூடாது” என சொல்லிவிட்டார். அசல் படத்தின் டைட்டிலின் கீழ் “பவர் ஆஃப் சைலன்ஸ் என டேக் போடுங்க” என அவர் தான் சொன்னார்.   

 

 


 

இந்நிலையில் ஆக்ரோஷமான அஜித்தை நான் காட்ட வேண்டும் என்றாலும் என்னால் காட்ட முடியாது. கையை கட்டிவிட்டு நீச்சல் அடிக்க சொன்னார். நானும் அவரும் அதை ரசித்து தான் செய்தோம். படத்தின் மேக்கிங் ஹாலிவுட் படம் போன்ற எஃபெக்ட்டில் இருந்தது. அசல் படத்தில் இது அனைத்தையும் தாண்டி உயிரோட்டமான லைன் ஒன்று இருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபாங்' படத்தின் அதே லைன் தான் 'அசல்' படத்திலும் இருந்தது.  அந்தப் படம் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் சல்மான் கான் அந்தக் கதாபாத்திரத்தை விசித்திரமாக செய்து இருந்தார், ஆனால் அஜித் அந்த கதாபாத்திரத்தில் அமைதியாக செய்து இருப்பார். 

 

டைட்டிலில் 'பவர் ஆஃப் சைலன்ஸ்' என அவர் டேக் செய்ய சொன்னதுக்கு முக்கியமான காரணமே படத்தைப் பார்த்துவிட்டு திட்டுவதாக இருந்தால் என்னைத் திட்டட்டும். எதிர்பார்த்தது போல இந்தப் படம் வராது. அதனால் பழி இயக்குநர் மீது வந்து விட கூடாது என்பதற்காக தான் அவர் டைட்டில் அப்படி போட சொன்னார்” எனக் கூறியுள்ளார்.