நடிகையும், அரசியல் பிரபலமுமான ரோஜா, ஒரு மனைவியாக எப்படி என்பதை அவரது கணவர் செல்வமணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


ஆர்.கே.செல்வமணி - ரோஜா


தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரோஜா. செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அன்றைய காலக்கட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடம் இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமாகவே உள்ளார். தனது செம்பருத்தி பட இயக்குநரான ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்துக் கொண்ட ரோஜா இன்றைக்கு ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத அரசியல் புள்ளியாக வலம் வருகிறார். ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் இருக்கும் நிலையில், ரோஜாவுடன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்வதற்கான காரணம் குறித்து ஆர்.கே.செல்வமணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


ஹனிமூனில் வெடித்த சண்டை


”ரோஜோவோட உண்மையான பெயர் ஸ்ரீலதா. நானும் அவரை லதா என்று தான் கூப்பிடுவேன். அவருக்கும் அதுதான் பிடிக்கும். நான் கோபமா இருந்தா ரோஜான்னு கூப்பிடுவேன். எங்க 2 பேருக்கும் நிறைய சண்டை வந்திருக்கு. திருமணம் நடந்தப்ப, ஹனிமூனுக்காக ஐரோப்பாவுக்கு சென்றிருந்தோம்.  திரும்பி வர்றப்ப டைவர்ஸ் பண்ணிடலாம் அப்படிங்கிற மனநிலையில தான் வந்தோம். அந்தளவுக்கு பயங்கர சண்டை நடந்துச்சு, இங்க வந்து என்னோட நண்பர்கிட்ட, ‘பிரிஞ்சுடலாம்னு இருக்கோம்’ன்னு சொன்னேன். 


ஆனால் அவரோ, ‘எல்லா இயக்குநர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். ஷூட்டிங் ஸ்பாட்டுல படத்துல நடிக்கிறதால நடிகையா உன்னோட கட்டுப்பாட்டுல இருப்பாங்க. இப்போ ரோஜா உன் மனைவி என்பதால் இங்கே நடிக்க மாட்டாங்க. அதனால் நீ இயக்குநர் இல்லை, அவங்க கணவன்னு புரிஞ்சுக்கணும். ரோஜா பலபேர்  முன்னிலையில், ‘என் வீட்டுக்காரர் என் பேச்சைத்தான் கேட்பார்'ன்னு சொல்லும்போது நீ ஆமான்னு தான் சொல்றப்ப, அவங்க அடையுற சந்தோஷத்துக்கு அளவே கிடையாதுன்னு சொன்னார். அவர் சொன்னதைத்தான் இப்போவரைக்கும் நான் ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றேன். இன்னைக்கு வரைக்கும் சண்டை வர்றதில்லை. கூடுதலா வாழ்க்கை ஆயிடுச்சு. 


‘என் வாழ்வின் அர்த்தம்’


இப்போ ரோஜா ஆந்திராவில்  பிஸியான அரசியல்வாதியாக இருக்காங்க. மகன் பிளஸ் 2 படிக்கிறான். மகள் அமெரிக்காவில் படிக்கிறாள். மகள்கிட்ட நடிக்கிறீங்களா?ன்னு நிறைய பேரு கேட்டாங்க, விருப்பம் இல்லைன்னு தெரிவிச்சா. ஆனா, சினிமாவுல நடிக்கணுன்னு ஆர்வம் பையனுக்கு இருக்கு.  ரோஜாவோட ஆரம்பக்கட்ட அரசியலிலிருந்து இப்ப வரை குழந்தைங்களை நான்தான் பார்த்துக்கிறேன். 'நான் இல்லைன்னாலும் செல்வமணி தான் குழந்தைங்களை அம்மா மாதிரி இருந்து பார்த்துப்பாங்க’ என எல்லோர்கிட்டேயும் சொல்லி ரோஜா என்னைப் பாராட்டுவாங்க. 


நான் படம் பண்ணி 15 வருஷம் ஆச்சு. இத்தனை வருஷமா வருமானமே இல்லாமல் சாப்பாடு, கார், வீடுன்னு சுயமரியாதையோட வாழ்றேன்னா ரோஜாவோட அன்லிமிடெட் அன்புதான் காரணம். எதிர்பார்ப்பில்லாத அன்போடு என்னை அரவணைச்சு நடந்துகிறாங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு அம்மா மாதிரிதான் எனக்கு ரோஜா இருக்காங்க.மொத்தத்துல ரோஜா ‘என் வாழ்வின் அர்த்தம்’ என செல்வமணி தெரிவித்துள்ளார்.