விக்ரம் படம் உருவானபோது கமல்ஹாசன் நல்ல வேளையாக அரசியல், பிக்பாஸில் பிஸியாக இருந்ததால் பெரிதாக அவர் தலையிடவில்லை. அதனால் அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் ஹிட்டாக்கிவிட்டார் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி, டினா என பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
இந்நிலையில், விக்ரம் படம் உருவானபோது கமல்ஹாசன் நல்ல வேளையாக அரசியல், பிக்பாஸில் பிஸியாக இருந்ததால் பெரிதாக அவர் தலையிடவில்லை. அதனால் அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் ஹிட்டாக்கிவிட்டார் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.


ஒரு விழாவில் பேசிய ஆர்.வி.உதயகுமார், "கமல்ஹாசன் நல்லவேளையாக அரசியல், பிக்பாஸில் பிஸியாக இருந்துவிட்டார். அதனால், இந்தக் கதையில் கான்சன்ட்ரேட் பண்ணவில்லை. முழுப் பொறுப்பையும் இயக்குநர்கிட்ட ஒப்படைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிண்ணி பெடல் எடுத்துவிட்டார். நம்ம பையனாச்சே. உண்மையாகவே சொல்கிறேன். யார் மீது நம்பிக்கை வைக்கிறோமோ. அவர்கள் வெற்றியைத் தருவார்கள். நான் ரஜினி சாரை வைத்து படம் பண்ணியிருக்கிறேன். அவர் என்கிட்ட நீங்க பெரிய பெரிய படம் பண்ணியிருக்கீங்க. கோபம் வந்தால் அடிச்சிருவீங்கன்னு சொன்னாங்க. என்ன ஒன்னும் பண்ணிடாதீங்கன்னு சொன்னாரு. நான் அவர்கிட்ட சார் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். எனக்கு ஒரு பிரம்மாண்ட கதை வேணும் என்றார். எவ்வளவு நாளாகும்னு சொல்லுங்க என்றார். நான் அவரிடம் கேட்டேன், சார் உங்களுக்கு ரஜினி படம் பண்ணனுமா இல்லை உதயகுமார் இயக்கத்தில் நீங்க நடிக்கணுமா என்றேன். அவரோ ரெண்டுமே ஒன்றுதான் என்றார். ஆனால் நான் இல்லவே இல்லை என்றேன். ரஜினி படம் எவன் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால், உதயகுமார் படம் உதயகுமார் மட்டும்தான் பண்ண முடியும். அந்தப் படத்தில் பிஆர்ஓவாக இருந்த துளசிக்கு தெரியும். நாங்கள் பூஜை போட்டதே ஒரு கிராண்டியர் படம். ரஜினி சார் இயக்குநர்களை ரொம்ப நம்புவார். நான் அந்தக் கதையில் பத்து ஹெலிகாப்டர் வரை வேண்டும் என்று சொன்னேன். ஏவிம் சரவணன் வேறு கதை இருக்கா என்றார். ஏன் என்றால் பட்ஜெட் சிக்கல். பூஜையெல்லாம் போட்ட அந்தப் படம் நிறுத்தப்பட்டது. ஜில்லா கலெக்டர் அதுதான் படத்தின் பெயர்.




ரஜினி சாருக்கும் அந்த நேரத்தில் கொஞ்ச செட் பேக் இருந்தது. அப்புறம் ரஜினி சார் சின்னக்கவுண்டர் மாதிரி படம் வேண்டும். எவ்வளவு நாள் ஆகும் என்றார். 2 மாதங்கள் கதை எழுதினேன். எஜமான் கதையை இரண்டு மாதங்களில் எழுதினேன். எஜமான் கதையை ஒரு வரியில் ரஜினி சாரிடம் சொன்னேன். சூப்பர் சார் என்று சொல்லிவிட்டார். எல்லாரும் என்ன ஒரு வரிக்கே சூப்பர் சொல்லிவிட்டார் என நினைத்தனர். ஆனால் ரஜினி சார் என்னை நம்பினார். தயாரிப்பாளரும் என்னை நம்பினார். ஒரு இயக்குநரை நடிகரும், தயாரிப்பாளரும் முழுசா நம்பினா அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி. அதை சொல்லவே இத்தனை கதையையும் சொன்னேன். அதைத் தான் விக்ரம் படத்தில் கமல் செய்துள்ளார். கமல் நம்பினார் லோகேஷ் வெற்றியைக் கொடுத்தார்" என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


அவர் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்று சிலரும். எதார்த்தமானது என்று சிலரும் விமர்சிக்கின்றனர்.