கைதி படம் போல வர வேண்டிய தன்னுடைய படம் எப்படி தடம் மாறியது என்பதை இயக்குநர் பிரபு சாலமன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, லாடம், மைனா, கும்கி, கயல், தொடரி, செம்பி, கும்கி 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். காதல் கதையை வித்யாசமான கோணத்தில் சொன்ன அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் பிரபு சாலமன் 2006ம் ஆண்டு கொக்கி என்ற படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வந்த கரண் முதல்முறையாக ஹீரோ வேடம் ஏற்ற நிலையில் அப்படம் வெற்றி பெற்றது. இதில் ஹீரோயினாக பூஜா காந்தி நடித்திருந்தார். தினா இசையமைத்திருந்தார். 

இந்த நிலையில் நேர்காணலில் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரபு சாலமன், “எனக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்த படம் என்னவென்று கேட்டால் அது “கொக்கி”. அந்த படம் 2006ம் ஆண்டு வெளியானது. வெறும் கேமரா மற்றும் ஃபிலிம் ரோல் கொடுங்க. நான் படம் எடுத்து காட்டுகிறேன் என சொல்லி இயக்கிய படம் அது. அந்த படத்தில் தான் என் பெயர் பிரபுசாலமன் என இடம் பெற்றிருந்தது. அது என்னுடைய முதல் படம் என சொல்லலாம். அந்த படம் எனக்கு சினிமா பாதையை திறந்து விட்ட படமாக அமைந்தது. 

Continues below advertisement

கொக்கி படத்தை நான் பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம் என நினைத்தேன். அப்படி எடுத்திருந்தால் இன்னைக்கு பாடல்கள் இல்லாத ஒரு படம் என கைதியை கொண்டாடுவது போல அன்றைக்கு கொண்டாடியிருப்பார்கள். கொக்கி படத்தின் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு கமர்ஷியலாக பாடல்கள் வேண்டும், ஹீரோயின் இருக்க வேண்டும் என கூறினார்கள். இல்லாவிட்டால் ஹீரோயினே இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். 

ஒரு சாதாரண மனிதன், அசாதாரண சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது படத்தின் கதை. கரண் எனக்கு கோகுலத்தில் சீதை படத்தின் மூலம் பழக்கம் என்பதால் அவரிடம் ஃப்ரீயா ஒருத்தர் வேண்டும் என சொன்னேன். அதற்கு கரண் நாம இந்த படம் பண்ணலாம் என கூறினார். ரொம்ப எளிதான பட்ஜெட் போட்டு கொடுத்ததை யாருமே நம்பவில்லை. ஃபிலிம் இருக்கும் காலத்திலேயே லைட் இல்லாமல் படமெடுத்தேன். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி செலவு ரூ.75 லட்சம் தான். அந்த படம் என்னை உயர்த்தி விட்டது” என தெரிவித்துள்ளார். பிரபு சாலமன் அடுத்ததாக மாம்போ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.