நடிகர் அட்டகத்தி தினேஷை வைத்து விரைவில் ஒரு படம் பண்ணப் போகிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என பல படங்களுக்கு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக மாற்றினார். தொடர்ந்து தங்கலான், சார்பட்டா பரம்பரை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கி வருகிறார். 


இப்படியான நிலையில் பா.ரஞ்சித் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் அவருடன், நடிகர் அட்டகத்தி தினேஷூம் பங்கேற்றார். இதில் பேசிய பா.ரஞ்சித், “ஒரு தைரியத்தில் தான் அட்டகத்தி படம் எடுத்தோம். நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து விட்டு படம் பண்ணலாம் என நினைத்து பெரிய நடிகர் ஒருவரிடம் தான் கதை சொல்ல நினைத்தேன். ஆனால் அவர் கதை கேட்க தாமதம் ஆனதால், பெரிய நடிகரிடம் முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தை விட்டு விட்டேன். ஆனாலும் சில பேரிடம் கதை சொன்னேன். இதற்கிடையில் கோவா பட ஷூட்டிங்கின் போது தினேஷை சந்தித்தேன்.


சிற்றிலக்கியங்கள் பற்றிய இதழ் ஒன்றை அவர் கையில் வைத்திருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அந்த எண்ணம் தான் அவரை என் படத்தில் நடிக்க வைக்கலாம் என தோன்ற வைத்தது. ஆனால் அட்டகத்தி படத்தில் நடிக்க வைப்பேன் என நினைக்கவில்லை. கதையை ஓகே பண்ணிவிட்டு, ஆபீஸ் எல்லாம் போட்டேன். தினேஷிடமே புதுமுகம் யாராது இருந்தால் சொல்லுமாறு சொன்னேன். அவனும் நிறைய பேரை அனுப்பிட்டே இருக்கான். நிறைய பேரை நான் ஆடிஷன் பண்ணினேன். அதேசமயம் தினேஷ் மேல எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது.


அவன் ஆடிஷன் கூட சரியாக பண்ணலை. உடனடியாக தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் போட்டு காட்டினேன். அவருக்கு தினேஷை பிடித்திருந்தது. அப்படித்தான் அவன் அட்டகத்தியில் ஹீரோவாக மாறுனான். நான் ஒன்னு ரசிச்சி எழுதுனா, நடிக்கிறவங்க அந்த கேரக்டரை மாறுவாங்க. ஆனால் உண்மையிலேயே தினேஷ் அட்டகத்தியா இருந்தவர் தான். நடிக்க வச்ச அப்புறம் தான் அவனுடைய அட்டகத்தி லீலைகள் எல்லாம் தெரிய வந்துச்சு. அந்த படம் எடுக்குறது பெரிய சவாலா இருந்துச்சு. 


அட்டகத்தி 2 படம் பண்ணலாம்ன்னு ஒருமுறை கேட்டேன். ஆனால் முடியாது என தினேஷ் சொல்லிவிட்டான். (உடனே தினேஷ் குறுக்கிட்டு, “அப்படி எல்லாம் இல்லை. சார் கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா? என சொல்ல, அதற்கு பா.ரஞ்சித் டேய் சாவடிச்சிடுவேன் என வேடிக்கையாக மிரட்டினார்). அடுத்ததாக தினேஷை வைத்து ஒரு படம் பண்ணப்போறேன். அது ஒரு கேங்ஸ்டர் படம்” என தெரிவித்தார்.