மாவீரன் படத்தில் நடித்தது ரொம்ப அழகான அனுபவமாக இருந்ததாக இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


மண்டேலா படம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மடோன் அஸ்வின் அடுத்ததாக ‘மாவீரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “மாவீரன் படத்தில் நடித்தது ரொம்ப அழகான அனுபவமாக இருந்துச்சு. மடோன் வந்து கதை சொன்னது, என்னோட நண்பர் தயாரிப்பு, சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், நான் எப்போதுமே சாவித்திரிக்கு அப்புறம் நடிகையாக நான் நினைக்கும் சரிதா ஆகியோரோடு பணிபுரிந்தது என எல்லாமே சிறப்பா இருந்துச்சு. 


நான் நடிகராக பழகவில்லை. மிகச் சரியாக இருக்க வேண்டியதாக உள்ளது. சிவா எப்படி இத்தனை வருஷமா இருக்காருன்னு தெரியல. அவருக்கு இதுக்கே அவார்டு கொடுக்கலாம். நான் சினிமாவுக்கு வந்து 23 வருஷம் ஆச்சு. சிவகார்த்திகேயன் மிகச்சரியான பண்புகள் கொண்ட ஒரு நடிகர். நான் ரஜினியோடு சிவாவை ஒப்பிட்டு பேசியதை தவறாக நினைத்துக் கொண்டார்கள். அவர் தனது வேலையில் சரியாக இருக்கிறார். ஒருநாள் இரவில் 15 பேரை அடிக்கிற காட்சி படமாக்கப்பட்டது. 40 ஷாட் எடுத்தார் இயக்குநர். இரவு முழுவதும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் அடி வாங்கும் சக தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்த ஒரு விஷயத்துக்காக சிவகார்த்திகேயன் ஒரு 40,50 வருஷம் சினிமாவில் இருக்க வேண்டும் என சாபம் கொடுத்தேன். 


நான் சரிதா, அதிதி கூட பெரிய அளவில் பணியாற்றவில்லை. சினிமாவில் இயக்குநர் வேலை என்பது கடினமானது. அவரை புரிந்து கொள்ளவே முடியாது. எந்த பகுதியில் இருந்து இயங்குகிறார் என தெரியாது. ஆனால் எல்லா விநாடிகளிலும் அதை எப்படி பெஸ்ட் ஆக செய்யலாம் என மடோனா அஸ்வின் மெனக்கெடுவார். ஒவ்வொரு படமும் அவரை உயர்த்திக் கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மாவீரன் படம் 14 ஆம் தேதி வெளியாகிறது. எனக்கெல்லாம் எரும மாடு வயசாகுது. படம் ஓடுனாலும் ஓடாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.  ஆனால் மடோனா அஸ்வின் சினிமாவில் 2வது குழந்தையை பெற்றெடுக்கிறார். கண்டிப்பாக படம் ஹிட்டாகும். 


இந்த படத்தில் நான் முழுக்க முழுக்க வில்லனாக நடித்துள்ளேன். என்னை நிஜ வாழ்க்கையிலேயே சிலர் வில்லனாக தான் பார்க்கிறார்கள். எந்த தைரியத்துல என்னோட கேரக்டரை எழுதியிருக்கிறார் என தெரியவில்லை. டப்பிங்கில் கூட 10,15 டேக் கூட எடுத்தார்கள். எங்க அம்மாவுக்கு அப்புறம் தமிழ் சொல்லிக் கொடுத்தது மடோனா அஸ்வின் தான்” என மிஷ்கின் கூறினார்.