தமிழில் திரௌபதி என்னும் திரைப்படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை என்னும் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்திற்கு கிடைத்த ஓரளவு வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு திரௌபதி என்ற பெயரில் அடுத்த படத்தை எடுத்திருந்தார். படத்தில் அஜித்தின் மைத்துனரும் , ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருக்க, திரௌபதி படம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. குறிப்பிட்ட சாதி மக்களை மோகன் ஜி உயர்த்தி பிடித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மோகன் ஜியை சாடினர்.ஆனால் படம் முழுக்க முழுக்க நாடக காதலுக்கு எதிரானது எனவும் இதில் எந்த சாதிய சாயமும் இல்லை எனவும் மோகன் ஜி தொடர்ந்து வலியுறுத்தினார். படத்தை ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் மற்றொரு தரப்பினர் திரௌபதி படத்திற்கு ஆதரவும் அளிக்கத்தான் செய்தனர். அந்த படத்தின் மூலம் மோகன் ஜி அடைந்த பிரபலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே! அதன் பிறகு மோகன் ஜி சமீபத்தில் 'திரௌபதி ‘ என்னும் பெயரிலான பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியிருந்தார்.

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் அடுத்து என்ன படம் இயக்க போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் , கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரிச்சர்ட் கூட்டணியில், ருத்ர தாண்டவம் என்னும் படம் இந்த ஆண்டு வெளியானது. அதுவும் சாதிய சாயல் கொண்ட படம்தான் என கூறப்பட்ட நிலையில் , அதனை இயக்குநர் மட்டுமல்லாமல் படக்குழுவினரும் மறுத்தனர். படம் மத மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டது என்றார் மோகன் ஜி. மேலும் இந்து மதத்தை அழிக்க நினைத்தால் என்னை போல யாராவது வருவார்கள் எனவும் சூளுரைத்தார்.அந்த படம் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது எனலாம். இந்த சூழலில் மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இன்று மாலை 6.40 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள இயக்குநர் மோகன் “ எனது அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பு இன்று மாலை 06:40 மணிக்கு.. என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி” என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு கீழே அவரது ரசிகர்கள் ஆதரவாகவும் , நெட்டிசன்கள் கேளியாகவும் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.